Published : 30 Jan 2015 09:48 AM
Last Updated : 30 Jan 2015 09:48 AM

வாகனங்களின் நம்பர் பிளேட்டில் இருக்கும் போலி ஹாலோகிராம் ஐஎன்டியை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்: ஆர்டிஓக்களுக்கு தமிழக அரசு உத்தரவு

வாகனங்களின் நம்பர் பிளேட்டில் இருக்கும் போலி ஹாலோகிராம் ஐஎன்டியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்டிஓக்களுக்கு போக்குவரத்து துறை ஆணையரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேச பாதுகாப்புக்காகவும், குற்ற நடவடிக்கையில் திருட்டு வாகனங்களை பயன்படுத்துவதை தடுப்பதற்காகவும் மோட்டார் வாகனங்களில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை பொருத்தும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி மத்திய, மாநில அரசுகள் அங்கீகாரம் அளித்துள்ள நிறுவனங்கள் வெளியிடும் ஹாலோகிராம் கொண்ட நம்பர் பிளேட்டை மட்டுமே பொருத்த வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலி ஹாலோகிராம் குறியீட் டுடன் நம்பர் பிளேட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றை தடுத்து நிறுத்தக்கோரி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதி பதிகள், போலி நம்பர் பிளேட்களை தயாரிப்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து, வாகனங்களில் நீல நிறத்தில் ‘ஐஎன்டி’ (இந்தியா) ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங் களில் போக்குவரத்து ஆணை யரக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். போலியாக நம்பர் பிளேட் பொருத்தியுள்ள வாகனங் களின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.100 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் அந்த நம்பர் பிளேட்டை அகற்றவும் அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர்.

இது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையரக உயர் அதிகாரிகள் கூறியதாவது:

உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை எல்லா மாநிலங் களிலும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரையில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஹாலோகிராம் கொண்ட நம்பர் பிளேட்டுகளில் வாகன உரிமையாளரின் பெயர், விலாசம், வாகனம் வாங்கிய ஆண்டு, தொடர்பு எண் உள்ளிட்ட எல்லா விபரங்களையும் கொண்ட ‘சிப்’ பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் தமிழகத்தில் சிலர் ‘ஐஎன்டி’ என வெறும் ஸ்டிக்கரை மட்டும் நம்பர் பிளேட்டில் ஒட்டிக் கொண்டு வாகனங்களை இயக்குகிறார்கள்.

இந்நிலையில், இது தொடர்பாக புதிய உத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்துள்ளது. எனவே, வாகனங்களின் நம்பர் பிளேட்டில் இருக்கும் போலி ஹோலோ கிராம் ஐஎன்டியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆர்டிஓக்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளோம். அதன்படி தற்போது மாவட்டங்கள் தோறும் சோதனைகள் நடந்து வருகின்றன. ஸ்டிக்கரை நீக்காமல் வரும் வாகனங்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும். அல்லது வழக்கு பதிவு செய்து நீதிமன்றம் மூலம் அபராதம் வசூலிக்கப்படும்.

தமிழகத்தை பொருத்தவரையில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டு களை அமைக்கும் திட்டத்தில் இன்னும் சில பரிந்துரைகள் சேர்க் கப்படும். பிறகு புதியதாக டெண்டர் விடப்பட்டு அதிகாரப்பூர்வமாக அரசு அறிவிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

போக்குவரத்து காவல் துறை உதவி ஆணையர் சுரேந்திரன் இதுபற்றி கூறும்போது, “ஹாலோகிராம் என்றால் என்ன? என்பது தெரியாமலே அதே போன்ற தோற்றத்தில் போலியான நம்பர் பிளேட்டுகளை சிலர் தயாரித்து விற்று வருகின்றனர். வாகனங்களில் இந்த போலி நம்பர் பிளேட்டுகளை வைத்திருப்பது சட்டப்படி தவறு. தமிழகத்தில் நம்பர் பிளேட்களில் த.நா அல்லது TN என்ற எழுத்துகளை தவிர வேறு எந்த வாசகம் இருந்தாலும் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். நம்பர் பிளேட்டுகளில் நம்பர் கள் ஒரே அளவில் எழுதப்பட்டிருக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x