Published : 04 Apr 2014 10:30 AM
Last Updated : 04 Apr 2014 10:30 AM
நள்ளிரவிலும் வீடுகளுக்குச் சென்று வாக்கு சேகரிக்கலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வாய்ப்பை ஏற்படுத்தும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு.
திருவாரூரில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி: “காங்கிரசின் பொருளாதாரக் கொள்கை பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸுக்கு மாற்றான அரசாக வர பாஜக முயற்சிக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் வராது. மக்களின் அடிப்படை உரிமைகளை முன்னிறுத்தியும், மாற்றத்தைக் கொண்டுவரவும் இடதுசாரி கட்சிகள் தேர்தலைச் சந்திக்கின்றன.
தமிழகத்தில் பெரிய கட்சிகளெல்லாம் பெண்களை வேட்பாளராக நிறுத்த முன்வராத நிலையில், இடதுசாரி கட்சிகள் பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் நில உரிமை மற்றும் அனைத்து சமூக மாற்றத்துக்காகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடியுள்ளது. எனவே, இங்கு போட்டியிடும் இடதுசாரி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி இல்லாமல் வீடுகளில் வாக்கு சேகரிக்கலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வாய்ப்பையும், மக்களுக்கு பல்வேறு சிரமங்களையும் ஏற்படுத்தும்” என்றார் நல்லகண்ணு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT