Last Updated : 13 Jan, 2015 09:29 AM

 

Published : 13 Jan 2015 09:29 AM
Last Updated : 13 Jan 2015 09:29 AM

ஜல்லிக்கட்டுக்காக மதுரையில் குவியும் வெளிநாட்டினர்: பொங்கல் திருநாளில் கிராமிய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் தீவிரம்

பொங்கல் விழா மற்றும் ஜல்லிக் கட்டை பார்ப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மதுரையில் குவிந்து வருகின்றனர்.

தமிழரின் வீரவிளையாட்டாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், சேலம், பெரம்பலூர், தஞ்சாவூர் உட்பட பல மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. ஆனால் மதுரை மாவட்டத்திலுள்ள அவனியா புரம் (தை 1), பாலமேடு (தை 2), அலங்காநல்லூர் (தை 3) ஆகிய இடங்களில் ஆண்டு தோறும் பொங்கல் திருநாளின் ஒரு அங்கமாக ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் அவற்றுக்கு பெரும் வரவேற்பு கிடைப்பதுண்டு. இதனைக் காண பிற மாநிலத்தினர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவர். எனவே மதுரை யில் மற்ற மாதங்களைவிட ஜனவரியில் வெளிநாட்டினர் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

வெளிநாட்டவர் ஆர்வம்

உச்ச நீதிமன்றத் தடை அமலில் இருப்பதால் இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழக அரசும், அமைப்புகளும் முயற்சி செய்துவந்தாலும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்குமா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை. ஆனாலும் ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பார்க்க மதுரைக்கு வருவதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றனர்.

பொங்கல் திருநாளின்போது இங்கு தங்குவதற்காக பெரும் பாலான நட்சத்திர விடுதிகளில் அறைகளை முன்பதிவு செய்துள் ளனர். சிலர் தற்போதே வந்து விட்டனர். இடைப்பட்ட நாட்களில் ராமேசுவரம், கன்னியாகுமரி, தேக்கடி, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங் களுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த கிளார் என்ற பெண் நேற்று அலங்காநல்லூர் சென்று ஜல்லிக்கட்டு மைதானம், வாடிவாசல், காளைகள் ஆகிய வற்றை பார்வையிட்டார்.

ஹோட்டல் அறைகள் முன்பதிவு

இதுபற்றி பார்ச்சூன் பாண்டியன் ஹோட்டல் மேலாளரான ரவி கூறும்போது, ‘மதுரையில் நடைபெறும் பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பார்க்க வெளிநாட்டினர் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, உக்ரைன், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தாண்டு அதிகளவில் இங்கு வர உள்ளனர். இவர்களுக்காக அனைத்து நட்சத்திர விடுதிகளிலும் அறைகள் முன்பதிவு செய்யப்பட் டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருமண நிகழ்ச்சிக்காக மதுரை வந்தி ருந்தனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குறித்து அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆர்வமடைந்த அந்த குடும்பத்தினர் ஜல்லிக்கட்டை நேரில் பார்வையிட முடிவு செய்து, தங்களது பயண திட்டத்தையே மாற்றிவிட்டனர்’ என்றார்.

ஆச்சரியப்படுத்தும் ஜல்லிக்கட்டு

பிரான்ஸை சேர்ந்த ஜோயல் என்பவர் கூறும்போது, ‘எங்கள் நாட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும். ஆனால் காளைகளின் கொம்புகளை ரப்பர் மூடியால் முற்றிலும் அடைத்து அதன்பின் மைதானத்தில் விடுவர். இதனால் அவற்றை பிடிக்கச் செல்வோரை குத்தினாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படாது. ஆனால் இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டில், கூர்மையான கொம்புகளை உடைய காளைகளை இளை ஞர்கள் அடக்குவதாக கேள்விப் பட்டதும் ஆச்சரியத்தில் உறைந்து விட்டேன். உயிரைப் பற்றி கவலைப்படாமல் களத்தில் இறங்கும் இளைஞர்களை பாராட்டியே ஆக வேண்டும். இந்த ஜல்லிக்கட்டை நேரில் பார்க்க வேண்டுமென ஆவலாக உள்ளேன்’ என்றார்.

இதற்கிடையே ஜல்லிக்கட்டு அனுமதி கிடைக்காதபட்சத்தில், அன்றைய நாட்களில் பாரம் பரியத்தை விளக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் தயாராகி வருகின் றனர். அனைத்து விடுதிகளிலும் சிறப்பு பொங்கல் நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x