Last Updated : 04 Jan, 2015 10:21 AM

 

Published : 04 Jan 2015 10:21 AM
Last Updated : 04 Jan 2015 10:21 AM

1 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு: கர்நாடகாவை காங்கிரஸ் இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை - பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பேட்டி

கர்நாடகா முழுவதும் பாஜகவில் 1 கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்து, காங்கிரஸ் இல்லாத மாநிலமாக விரைவில் மாற்றப்படும் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

பாஜகவின் தேசிய தலைவராக அமித் ஷா பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் புதிய உறுப் பினர்கள் சேர்ப்பு, உயர்மட்ட நிர்வாகிகள் சந்திப்பு உள்ளிட்ட பணிகளுக்காக அமித் ஷா நேற்று பெங்களூருவுக்கு வந்தார்.

பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் நேற்று பெங் களூருவில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அமித் ஷா கூறியதாவது:

காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்து விட்டது. கர்நாடகத்தில் சட்டம் ஒழுங்கு முழுவதுமாக பாதிக்கப் பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். காங்கிரஸ் அமைச்சர்கள் மீது ஏராளமான ஊழல் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே காங்கிரஸை கர்நாடக மக்கள் தூக்கியெறிய வேண்டும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸிடமிருந்து நாட்டைக் காப்பாற்றியதைப்போல, கர்நாடகத்தைக் காப்பாற்ற வேண்டும். காங்கிரஸ் ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கிறது. இதற்காக சுமார் 25 கோடி பேரை பாஜகவில் உறுப் பினர்களாக சேர்க்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கர்நாடகத்தில் இம்மாதத்தில் ஒரு கோடி உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்படுவார்கள். இதன் மூலம் காங்கிரஸ் இல்லாத மாநிலமாக கர்நாடகா மாற்றப்படும்.

மடங்களையும், மத‌ அறக்கட்டளைகளையும் ஒடுக்க கர்நாடக அரசு புதிய சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ளது. வாக்கு வங்கியை குறிவைத்து முந்தைய பாஜக அரசு கொண்டுவந்த பசுவதை தடுப்பு சட்டத்தை ரத்து செய்துள்ளது. எனவே க‌ர்நாடக அரசை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்துமாறு கர்நாடக பாஜக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பிரதமர் மோடி தலைமை யிலான மத்திய அரசு பல்வேறு நல திட்டங்களையும், அதிரடி சட்டங்களையும் தீட்டி வருகிறது. தொழில் துறையில் அந்நிய முதலீடுகளை ஈர்க்க புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. விலைவாசி குறைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 100 மாதிரி நகரங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x