Published : 03 Jan 2015 08:18 AM
Last Updated : 03 Jan 2015 08:18 AM

‘தீர்ப்பாய உத்தரவுப்படி, சட்டவிரோத இயக்கம்’: விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு- தமிழக அரசு உத்தரவு

தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுப்படி, விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரோத இயக்கம் என்பதால், அதன் மீதான தடை உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் (எல்டிடிஈ) இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1991-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதில் இருந்து, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த தடை கடந்த ஆண்டு முடிந்தது. தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இதற்காக தமிழகத்தின் முக்கியமான இடங்களில் தீர்ப்பாயம் மூலம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் என்பதை மீண்டும் தீர்ப்பாயம் உறுதி செய்து, தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழக அரசும் புலிகள் இயக்க நடவடிக்கைகளுக்கு தடை விதித்து, அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் பொதுத் துறை முதன்மைச் செயலர் ஜிதேந்திரநாத் ஸ்வைன் பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீட்டிப்பது தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியது. புலிகள் இயக்கம் மற்றும் அதன் ஆதரவு நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்தது. அந்த இயக்கத்தின் நடவடிக்கைகள் அகண்ட தமிழகம், தமிழர்கள் வாழும் பகுதியில் தனி நாடு, இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு என்ற கோரிக்கையை நோக்கியுள்ளன.

இதுதொடர்பாக கடந்த மே 5-ம் தேதி விடுதலைப் புலிகள் இயக்கத்தினருடன் தொடர்பு கொண்ட 6 இலங்கைத் தமிழர்கள் ராமநாதபுரம் மாவட்டம் அரிச்சல்முனை கடற்கரைக்கு பாஸ்போர்ட் இல்லாமல், சட்டத்துக்குப் புறம்பாக வந்திறங்கினர். அவர்கள் மீது தனுஷ்கோடி போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிவகங்கை மாவட்டம் மானகிரியில் உள்ள வீடு முன்பு தமிழ்நாடு விடுதலைப் படை என்ற புலிகள் ஆதரவு அமைப்பினர் கடந்த பிப்ரவரி 11-ம் தேதி பிரிவினை வாசக நோட்டீஸ்களை எறிந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 4-ம் தேதி, ப.சிதம்பரத்தின் பண்ணை வீட்டில் பைப் குண்டு வைத்து வெடிக்க வைத்தனர். கடந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி, முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் காருக்கு அடியில் பைப் குண்டு வைத்தனர்.

மதுரை உத்தங்குடியில் தமிழ்நாடு விடுதலைப் படையினர் இரும்பு பைப் குண்டு, பெட்ரோல் குண்டு வைத்துவிட்டுச் சென்றதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

மேலும் செங்கல்பட்டு, திருச்சி அகதிகள் முகாம்களில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.

பிரபாகரனின் மகன்கள் சார்லஸ் ஆன்டனி, பாலச்சந்திரன் பெயர் பொறித்த கல்வெட்டும் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இன்னும் தங்கள் நடவடிக்கைகள், தொடர்பில் உள்ளனர் என இதன்மூலம் தெரிகிறது.

எனவே, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுப்படி, விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரோத இயக்கம் என்பதால், அதன் மீதான தடை உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x