Published : 15 Apr 2014 10:42 AM
Last Updated : 15 Apr 2014 10:42 AM

பெண்ணை கிண்டல் செய்த இளைஞர் அடித்து கொலை

மது போதையில் பெண்ணை கிண்டல் செய்த இளைஞரை 2 பேர் சேர்ந்து கல்லால் அடித்து கொலை செய்தனர்.

சென்னை சேத்துப்பட்டு அப்பாசாமி தெருவில் உள்ள குடிசைப் பகுதியை சேர்ந்தவர் பிரான்ஸிஸ் செல்வராஜ் (26). இவரது மனைவி ஜெகதேவி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லை. பிரான்ஸிஸ் தினமும் மது குடித்துவிட்டு, பக்கத்து வீட்டுக்காரர்களை திட்டுவது வழக்கம். இதனால் பலமுறை சண்டையும் ஏற்பட்டுள்ளன.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரான்ஸிஸ் செல்வராஜுக்கும், அவரது மனைவி ஜெகதேவிக்கும் சண்டை ஏற்பட்டு அருகே இருக்கும் பெற்றோரின் வீட்டுக்கு ஜெகதேவி சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த பிரான்ஸிஸ் வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை இரவிலும் மது குடித்துவிட்டு, வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு, பக்கத்து வீட்டுக்காரர்களை திட்டி, கலாட்டா செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பெண்ணையும் கிண்டல் செய்து, அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை காலையில் தனது குடிசை வீட்டுக்குள் பிரான்ஸிஸ் பிணமாகக் கிடந்தார். அவரது தலையில் கல்லால் அடித்த காயம் இருந்தது. தலையில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் அவர் இறந்துகிடந்தார்.

இதுகுறித்து அருகே இருந்தவர்கள் சேத்துப்பட்டு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்க, அவர்கள் விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

போலீஸார் கூறுகையில், “பிரான்ஸிஸ் கிண்டல் செய்த பெண், நடந்த சம்பவத்தை வீட்டில் கூற, அந்த பெண்ணின் உறவினர்கள் சார்லஸ், நீலகண்டன் ஆகியோர் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவில் பிரான்ஸிஸ் வீட்டுக்கு வந்து அவரை அடித்து உதைத்துள்ளனர்.

அவர்கள் கல்லையும் எடுத்து பிரான்ஸிஸ் தலையில் அடித்ததாக தெரிகிறது. இதில் மண்டை உடைந்து ரத்தம் வெளியேறி பிரான்ஸிஸ் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது” என்றனர்.

சார்லஸ், நீலகண்டன் இருவரையும் சேத்துப்பட்டு போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x