Published : 01 Jan 2015 10:15 AM
Last Updated : 01 Jan 2015 10:15 AM

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம விடுதிகள் மீது மீண்டும் தாக்குதல்

புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சொந்தமான கட்டிடங்கள் மீது மர்ம நபர்கள் நேற்று மீண்டும் கல் வீசி தாக்கியதில் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.

புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்துக்கு சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்த சகோதரிகள் 5 பேர் சில வாரங்களுக்கு முன் வெளியேற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து பெற்றோருடன் கடலில் குதித்தனர். அதில், 3 பெண்கள் உயிரிழந்தனர். ஹேமலதா உள்ளிட்ட 3 சகோதரிகளும் அவர்களின் தந்தை பிரசாத்தும் உயிருடன் மீட்கப்பட்டனர். இதையடுத்து, அரவிந்தர் ஆசிரமத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. ஆசிரமத்துக்கு சொந்தமான தங்கும் விடுதிகள், பெட்ரோல் பங்க், பல்பொருள் அங்காடி போன்றவை அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த நிலையில், புதுச்சேரியில் பட்டேல் சாலையில் உள்ள ஆசிரமத்துக்கு சொந்தமான குடியிருப்பு, மணக்குள விநாயகர் கோயில் வீதியில் உள்ள விடுதி, விக்தோர் மிமோன்ஸ் வீதியில் உள்ள மற்றொரு தங்கும் விடுதி ஆகியவற்றின் மீது நேற்று அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. இந்த சம்பவம் குறித்து பெரியக்கடை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x