Published : 04 Jan 2015 10:09 AM
Last Updated : 04 Jan 2015 10:09 AM

புதிய மணல் குவாரிக்கு எதிர்ப்பு: பாலாற்றில் கிராம மக்கள் போராட்டம்

குடியாத்தம் அருகே பாலாற்றில் புதிதாக மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட் டனர்.

மாதனூர் அடுத்த தோட்டாளம் கிராமத்துக்கு அருகில் உள்ள பாலாற்றில் மணல் குவாரி அமைக் கப்பட்டுள்ளது. இங்கு அரசு அனுமதித்த அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதாக புகார் கூறப்படுகிறது. மணல் குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், குடியாத்தம் அடுத்த அனங்காநல்லூர், கூத்தம் பாக்கம், சிங்கல்பாடி, உள்ளி, கூடநகரம், பார்வதியாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு அருகில் உள்ள பாலாற்றில் புதிதாக மணல் குவாரி அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிலர், பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் மணலின் தன்மை குறித்து ஆய்வு செய்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மணல் குவாரி புதிதாக அமைந்தால் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்றும், ஏற்கெனவே தோல் கழிவால் தண்ணீர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மணல் குவாரியால் இருக்கின்ற விவசாயமும் பாழாகும் என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

மணல் குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் அனங்காநல்லூர் பாலாற்றங்கரையில் நேற்று காலை குவிந்தனர். மணல் குவாரி அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி அவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கையை அரசுக்கு அனுப்பி வைக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x