Published : 26 Apr 2014 09:10 AM
Last Updated : 26 Apr 2014 09:10 AM

திமுக ஆட்சியில் நடந்த பள்ளி ஆசிரியர் இடமாற்றம் குறித்து திடீர் கணக்கெடுப்பு: மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு

திமுக ஆட்சியின்போது அரசு பள்ளிகளில் நடந்த ஆசிரியர் இடமாற்றங்கள் குறித்து தமிழகம் முழுவதும் கணக்கெடுக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 23,522 அரசு தொடக்கப் பள்ளிகள், 7,651 அரசு நடுநிலைப்பள்ளிகள், 2,844 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 2,488 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த அரசு பள்ளிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மே அல்லது ஜூன் மாதம் நடைபெறுவது வழக்கம். இடமாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்களில், பணிமூப்பு உள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகள், முப்படையினரின் வாழ்க்கை துணை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர், இதய நோயாளிகள், கணவன்-மனைவி இருவரும் பணியாற்றுபவர்கள் போன்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஆசிரியர் இடமாறுதல்

பொது இடமாறுதலின்போது எந்தெந்த பள்ளிகளில் காலியிடங் கள் உள்ளன என்ற பட்டியல் வெளியிடப்பட்டு ஆசிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமான இடங்களை தேர்வுசெய்வார்கள். வருடாந்திர பொது இடமாறுதல் நீங்கலாக, நிர்வாக நலன் கருதி அவ்வப்போது இடமாற்றங்கள் செய்யப்படும்.

சென்னை உள்பட முக்கிய இடங்களில் ஆசிரியர் காலியிடங் கள் மறைக்கப்பட்டு அரசியல், நிர்வாக சிபாரிசு அடிப்படையில் வேண்டியவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுகிறது என்றும், இதற்கு லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது என்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகி றார்கள். தென்மாவட்டங்களுக்கு இடம் மாறிச்செல்ல எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுக்க ஒரு சில ஆசிரியர்கள் தயாராக இருப்பதாகவும் கூறப் படுகிறது.

ரகசிய கணக்கெடுப்பு

இத்தகைய சூழலில், கடந்த திமுக ஆட்சியி்ல் (2006-2011) தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நடந்த ஆசிரியர், தலைமை ஆசிரியர் இடமாறுதல் குறித்து ரகசிய கணக்கெடுப்பு நடத்த அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திமுக ஆட்சிக்காலத் தில் நடந்த ஆசிரியர் இட மாறுதல் குறித்த விவரங்களை கணக்கெடுக்குமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கள் அறிவுறுத்தப்பட்டிருப்பதா வும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திடீர் கணக்கெடுப்பு தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரிட மிருந்து அதிகாரப்பூர் வமாக உத்தரவு ஏதும் அனுப்பப்பட்டதா? என்பது தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x