Published : 29 Jan 2015 10:20 AM
Last Updated : 29 Jan 2015 10:20 AM

அனல் மின்நிலைய விரிவாக்கத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்த மக்கள் - அரசுகள் இறுதி முடிவு எடுக்கும்: ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டி அருகேயுள்ள தனியார் அனல் மின்நிலைய விரிவாக்கம் தொடர்பாக மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நேற்று நடைபெற் றது.

கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள ஈகுவார்பாளையம் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக ஏஆர்எஸ் என்ற தனியார் அனல் மின் நிலை யம் இயங்கி வருகிறது. இங்கு நிலக்கரியிலிருந்து 65 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஈகுவார் பாளையம், சித்தூர்நத்தம், சிறுபுழல்பேட்டை பகுதிகளில் 28.39 ஏக்கரில் கூடுதலாக இரு யூனிட்களை அமைத்து, 485 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் அனல் மின்நிலையத்தை விரிவுபடுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டது.

இதற்காக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், அனல் மின்நிலைய வளாகத்தில் நேற்று மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உமையான் குஞ்சரம், கும்மிடிப் பூண்டி வட்டாட்சியர் பால்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அனல் மின்நிலைய விரிவாக்கத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் மக்கள் கருத்துகளைக் கூறினர். அனல் மின்நிலைய நிர்வாகத் தரப்பினர் பேசும்போது, ‘நவீன விஞ்ஞான முறைகளால் அனல் மின்நிலையத்தில் இருந்து மாசு வெளியேறுவது கட்டுப்படுத்தப்படுவதால், மக்கள் கவலைப்படத் தேவையில்லை’ என்றனர்.

மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பேசும்போது, ‘மக்கள் கூறிய கருத்துகளும், அனல் மின்நிலையத் தரப்பினர் கூறிய கருத்துகளும் உரிய துறைகளுக்கு அனுப்பப்படும் . இந்த விவகாரத்தில் மத்திய- மாநில அரசுகள் இறுதி முடிவு எடுக்கும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x