Last Updated : 08 Apr, 2014 10:42 AM

 

Published : 08 Apr 2014 10:42 AM
Last Updated : 08 Apr 2014 10:42 AM

தமிழகத்தில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்: காவல்துறை அதிரடி நடவடிக்கை அவசியம்... அவசரம்!

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 210 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. சென்னை மாநகரில் மட்டும் 97 செயின் பறிப்புகள் நடந்துள்ளன.

சமீபகாலமாக செயின் பறிப்பு அதிகரிக்க என்ன காரணம்? 1.தங்கம் விலை உயர்வு. 2.பணமாக்குவது எளிது. 3. கொள்ளையர்களை அடையாளம் கண்டுபிடிப்பது கடினம். 4.கொஞ்சம் ரிஸ்க், நிறைய பணம். 5.விழிப்புணர்வு, எச்சரிக்கை உணர்வு இல்லாத பெண்கள். 6.உழைக்க விரும்பாத சோம்பேறி இளைஞர்களின் அதிக பணத்தாசை. 7.இவற்றெல்லாம்விட முக்கியமாக கண்டுகொள்ளாத காவல் துறை. இவைதான் செயின் பறிப்பு அதிகரித்திருப்பதற்கான பிரதான காரணங்கள்.

இன்று வழிப்பறி கொள்ளையர் கள் புதிது புதிதாக உருவாகின்றனர். சில மாணவர்களும் பார்ட் டைம் ‘வேலை’யாக செயின் பறிப் பில் ஈடுபடுவது வேதனை. செயின் பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறுவதற்கு முதல் காரணமும் இதுதான்.

செயின் பறிப்பு கொள்ளை யரைத் தடுப்பது தொடர்பாக காவல் துறையினரிடம் பேசியபோது, ‘‘அது முடியாத காரியம். பெண்கள்தான் செயினை மறைத்து, ‘பின்’ குத்திக்கொண்டு பாதுகாப்பாகச் செல்ல வேண்டும்’’ என்று சாதா ரணமாகக் கூறுகின்றனர். செயின் பறிகொடுத்த பெண்கள் காவல் நிலையம் சென்றால், ‘‘நீங்கள் கவனமாகச் செல்ல மாட்டீர்களா?’’ என்பதுதான் அவர்களுக்கு கிடைக்கும் முதல் பதில்.

தடம் மாறும் மாணவர்கள்

சராசரியாக 10 செயின் பறிப்பு சம்பவங்களில் 6-ல் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுகின்றனர் என்ற தகவல் அதிர்ச்சியாக உள்ளது. நண்பர்கள் மற்றும் பெண்களுடனான தவறான பழக்கத்துக்காக இன்றைய இளைஞர்களுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. ஈஸியாக பணம் சம்பாதிக்க அவர்கள் தேர்ந் தெடுக்கும் வழி செயின் பறிப்பு.

வடமாநிலத்தவர் கைவரிசை

வடமாநிலப் பெண்களைவிட தமிழகப் பெண்கள் தங்க நகைகள் அதிகம் அணிகின்றனர். இதற் காகவே வடமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்து சில மாதம் தங்கிக்கொண்டு தொடர்ச்சியாக செயின்களை பறித்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பும் வழிப்பறிக் கூட்டமும் உண்டு. அதை பணமாக்கி செலவு செய்து, அந்த பணம் காலியானதும் மீண்டும் தமிழகம் வருகின்றனர்.

அடகுக் கடையினர் உதவி யில்லாமல், திருட்டு நகைகளை அவர்கள் பணமாக்கிவிட முடியாது. அந்த அடகு கடைக்காரர்களைக் கண்டுபிடித்து போலீஸார் நடவ டிக்கை எடுக்கலாம். திருட்டு நகைகளை வாங்கும் நகைக் கடைக்காரர்கள் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இப்போதெல்லாம் நகைக் கடைக்காரர்கள் பக்கம் நெருங்குவதே இல்லை.

செயின் பறிப்பு சம்பவம் நடந்ததும் அப்பகுதியே பரபரப்பாகி விடுகிறது. அடுத்த 10 நிமிடத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கிடைத்துவிடுகிறது. உடனே அதிரடி தேடுதல் வேட்டை, வாகன சோதனையில் இறங்கினால், அதே பகுதியிலேயே கொள்ளையரை சுற்றிவளைத்துப் பிடித்துவிட முடியும். ஆனால் ஒரு சம்பவத்தில்கூட போலீஸார் இப்படி செயல்படவில்லையே என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.

போலீஸ் மெத்தனமா?

போலீஸார் விரைந்து நடவ டிக்கை எடுக்காததன் விளைவு.. செயின் பறிப்பில் ஈடுபட்டுவரும் குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள் என்பது மட்டுமல்ல; புதிதாக உருவாகும் கொள்ளையர்களுக்கு போலீஸின் மெத்தனம் நம்பிக்கை கொடுக்கிறது. புதிய குற்ற வாளிகளை உருவாக்குகிறது. புதிய கொள்ளையர்களை மீண்டும் குற்றம் செய்யத் தூண்டுகிறது.

பெரும்பாலும் செயின் பறிப்பு சம்பவங்களால் பாதிக்கப்படுவது ஏழைகளும், நடுத்தர மக்களும்தான். செயின் பறிப்பு செய்திகள் அதிக பட்சம் காவல் நிலைய ஆய்வாளர் வரை செல்கிறது. அதற்குமேல் உள்ள அதிகாரிகள் காதில்கூட விழுவதில்லை. பல செயின் பறிப்பு சம்பவங்களுக்கு வழக்குப் பதிவதே இல்லை.

செயின் பறிப்பு சம்பவங்களுக்கு காரணம் காவல் துறையின் அலட்சியம் மட்டுமே. இதை அதிகாரிகள் உணர்ந்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x