Last Updated : 18 Jan, 2015 01:09 PM

 

Published : 18 Jan 2015 01:09 PM
Last Updated : 18 Jan 2015 01:09 PM

தனுஷ்கோடியில் மயில்கள் சரணாலயம் அமைக்கப்படுமா? - தேசியப் பறவையைப் பாதுகாக்க இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்

தேசியப் பறவையான மயில் இனத்தை பாதுகாக்க தனுஷ்கோடியில் மயில்கள் சரணாலயம் அமைத்து, அவற்றுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசியப் பறவை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 1960-ம் ஆண்டு சர்வதேச பறவை பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அழிந்துவரும் பறவை இனங்களைப் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் பறவையைத் தேர்வு செய்து அதனை தேசியப் பறவை என்று அறிவிக்க முடிவெடுத்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியா மயிலை தேசியப் பறவையாக அறிவித்தது.

மருந்துக்காக பல்வேறு ஆசிய நாடுகளில் மயில் தோகைகளுக்கு வரவேற்பு இருந்ததால் மயில்கள் இந்தியாவில் தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்டன. இதனைத் தொடர்ந்து மயில்கள் வேட்டையாடப்படுவதைத் தடுப்பதற்காக 1972-ம் ஆண்டு மயில்களை வேட்டையாடுவது தண்டனைக்குரியது என இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டது.மதுரை- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி ஆகிய பகுதியில் தென்னந்தோப்புகளில் மயில்கள் கூட்டம் கூட்டமாகத் திரிவது பார்ப்

பதற்கு கண்கொள்ளா காட்சியாகும். இதனைப் பார்வையிட ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் தவறுவது கிடையாது. ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோரங்களில் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த மயில்கள் தங்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு தற்போது கடலோரங்களில் போதிய உணவு கிடைக்காததால் விவசாய நிலங்களுக்கு மயில்கள் நகரத் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர் தாகிர் சைபுதீன் கூறியதாவது, கோழி இனத்தை சேர்ந்த மயில்கள் பூச்சிகள், புழுக்கள் மற்றும் சிறிய ரக பாம்புகள் மற்றும் தானியங்களை உணவாக உட்கொள்ளக் கூடியவை. ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் வாழும் மயில்கள் கடற்கரைகளில் போதிய உணவுகள் கிடைக்காததால் விவசாய நிலங்களுக்கு அவை நகரத் தொடங்கியுள்ளன.

ஆனால் ராமேசுவரம் தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வாழும் மயில்கள் சாலை மற்றும் ரயில் தண்டவாளப் பகுதிகளில் சிதறிக் கிடக்கும் உணவு வகைகளையும் இரையாக சாப்பிடுகின்றன. இதனால் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில் தண்டவாளங்களில் விபத்துகளில் சிக்கி மயில்கள் இறக்கும் அபாயங்கள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையைப் போக்க தேசியப் பறவையான மயிலுக்கு தனுஷ்கோடி சவுக்காடு பகுதியில் சரணாலயம் அமைக்க வேண்டும். இதன்மூலம் மயில்களுக்கு பாதுகாப்பு கிடைப்பதுடன், ராமேசுவரம் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா வருபவர்களுக்கு மயில்கள் சரணாலயத்தை பார்த்த திருப்தியும் கிடைக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x