Published : 21 Jan 2015 01:03 PM
Last Updated : 21 Jan 2015 01:03 PM

இலங்கை அரசின் அறிவிப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது: கருணாநிதி

தமிழர்களுக்கு கூடுதல் உரிமைகள் அளிக்கும் 13-வது சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படும் என்ற இலங்கை பிரதமர் அறிவித்துள்ளது பெரும் மகிழ்ச்சியும், உலகத் தமிழர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையும் ஏற்படுத்துவதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா - இலங்கை இடையே 1987ஆம் ஆண்டு ஒப்பந்தம் முடிவுற்று, இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி அவர்களும், அன்றைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா அவர்களும் கையெழுத்திட்டனர்.

அதன் தொடர்ச்சியாக இலங்கை அரசியல் சட்டத்தில், 13வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழர்கள் அங்கே வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட அனைத்து மாகாணங்களுக்கும் அதிகார பகிர்வு அளிக்கப்படும் என்பதற்கு அந்தச் சட்டத் திருத்தத்தில் வகை செய்யப்பட்டிருந்தது. மேலும் சிங்கள மொழிக்கு இணையாக தமிழ் மொழியையும் ஆட்சி மொழியாக அங்கீகரிப்பதற்கும், மாகாண வாரியாக உயர் நீதி மன்றங்களை அமைப்பதற்கும் அந்தச் சட்டத் திருத்தம் உறுதி அளித்திருந்தது.

ஆனால் அதற்குப் பிறகு பொறுப்புக்கு வந்த இலங்கை அரசுகள் அந்தச் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த முன் வர வில்லை. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த இலங்கை உச்ச நீதிமன்றம், 13வது சட்டத் திருத்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

அதனால், மாகாணங்களுக்கு அங்கே இதுவரை அதிகாரப் பகிர்வு கிடைக்கவில்லை. எனவே இந்த 13வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப் படுத்துமாறு இந்திய அரசு இலங்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல முறை இந்த 13வது சட்டத் திருத்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டுமென்று வலியுறுத்தி வந்தோம்.

இந்தப் பிரச்சினையில் தான் தற்போது இலங்கையில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள சிறிசேனா அவர்களின் அரசில் பிரதமர் பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே அவர்கள் நேற்றைய தினம் முதல் முறையாக கூடிய பாராளுமன்றத்திலே 13வது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்திருப்பது நமக்கெல்லாம் பெருமகிழ்ச்சியைத் தருகிறது.

அவர் பேசும்போது, "மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வகை செய்யும் 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவோம். ஒன்றுபட்ட இலங்கை என்ற அடிப்படை யிலும் சிறுபான்மை தமிழர்களுடன் நல்லிணக்கத்தை எட்டுவதற்காகவும் இந்தச் சட்டத் திருத்தத்தை அமல்படுத்தப் போகிறோம்" என்றெல்லாம் கூறியிருப்பது, இலங்கைத் தமிழர்கள்பால் அக்கறை கொண்ட உலகத் தமிழர்களுக்குப் பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.

இலங்கையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சிறிசேனாவின் அரசு இந்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டுமென்றும், இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையானவற்றை பேச்சுவார்த்தை மூலம் விரைவிலே தீர்வு காண முன் வர வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்" என கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x