Published : 19 Jan 2015 09:52 AM
Last Updated : 19 Jan 2015 09:52 AM

இடைத்தேர்தலால் புதிய திட்டங்களை அறிவிக்க முடியாது: பேரவையில் ஆளுநர் உரை தள்ளிப்போகிறது

ஆளுநர் உரையில் புதிய திட்டங் களை அறிவிக்க இயலாது என்பதால் இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தை ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலுக்கு பிறகு நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ஆண்டுதோறும் 3 முறை தமிழக சட்டப்பேரவை கூட்டப்படுவது வழக்கம். ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி இறுதி வாரத்தில் நடக்கும். இதில் ஆளுநர் உரையாற்றுவார். இந்த கூட்டத் தொடர் நான்கைந்து நாட்கள் நடக்கும். அதைத் தொடர்ந்து பிப்ரவரி இறுதி வாரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி சுமார் ஒரு மாதம் நடக்கும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் குளிர்காலக் கூட்டத் தொடர் நடத்தப்படும். இதுதவிர, ஏதாவது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை என்றால் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டவும் வழி இருக்கிறது.

ஆளுநர் உரையில் அரசின் செயல்பாடுகள், சாதனைகள், புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இடம் பெறும். பொதுத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், புதிய திட்டங்களை அறிவிக்க முடியாது. அத னால் ஆளுநர் உரை மற்றும் பட்ஜெட் கூட்டத் தொடர்கள் தள்ளிப் போகும்.

2015-ம் ஆண்டுக்கான பேரவை முதல் கூட்டம், ஜனவரி இறுதியிலோ பிப்ரவரி முதல் வாரத்திலோ கூட்ட வேண்டும். ஆனால், தற்போது ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பேரவை கூட்டம் தள்ளிப்போகிறது.

இதுகுறித்து பேரவைச் செயலக வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர், கடந்த டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி 8-ம் தேதி வரை நடந்தது. பேரவை அலுவல்கள் நிறைவுக்கான அதிகாரப்பூர்வ உத்தரவை கடந்த 14-ம் தேதி ஆளுநர் பிறப்பித்துள்ளார்.

ஜனவரியில் ஆளுநர் உரைக் கான கூட்டம் நடத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது பேரவையைக் கூட்ட வேண்டும் என்பதுதான் விதி. அதேநேரம் புதிய ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை இடம்பெற வேண்டும்.

தற்போது ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், பிப்ரவரி இறுதியிலோ மார்ச் முதல் வாரத்திலோ சட்டப்பேரவை கூட்டம் தொடங்க வாய்ப்புள்ளது. இதில் ஆளுநர் உரை இடம்பெறும். அதன் தொடர்ச்சியாகவோ, சில நாட்கள் கழித்தோ பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கலாம்.

இவ்வாறு பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, பட்ஜெட் தயாரிப்புக்கு முந்தைய துறை ரீதியான ஆயத்தக் கூட்டங்கள் கடந்த வாரமே தலைமைச் செயலகத்தில் தொடங்கிவிட்டது. இதுவரை சுகாதாரம், முத்திரைத் தாள் மற்றும் பதிவு, வணிகவரி, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வா கம், சட்டம் மற்றும் சிறை மற்றும் கூட்டுறவு ஆகிய துறைகளின் முதல்கட்ட ஆலோசனைக் கூட்டங் கள் நடந்து முடிந்துள்ளன. பொங்கல் விடுமுறை முடிந்துள்ள நிலையில், இன்று முதல் துறை ரீதியான ஆலோசனைக் கூட்டங்களை தீவிரமாக நடத்த அரசுத் தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x