Published : 30 Jan 2015 10:45 AM
Last Updated : 30 Jan 2015 10:45 AM

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு புதிய இடம்: பாரம்பரிய கட்டிடம் ‘கலாஸ் மகால்’ தேர்வு - அரசுக்கு கருத்துரு அனுப்பியது பொதுப்பணித் துறை

சென்னை அரும்பாக்கத்தில் செயல் பட்டுவரும் தேசிய பசுமைத் தீர்ப்பாய அலுவலகத்துக்கு சென்னையின் பாரம்பரியக் கட்டிடங்களில் ஒன்றான ‘கலாஸ் மகால்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான கருத்துருவை பொதுப்பணித் துறை சமீபத்தில் அரசுக்கு அனுப்பியுள்ளது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வு கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி அமைக்கப்பட்டது. அப்போதிருந்து, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரி யத்தின் சென்னை மாவட்ட அலுவல கத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

நாட்டில் உள்ள 5 பசுமைத் தீர்ப்பாய அமர்வுகளில் தென்னிந்திய அமர்வில் மட்டும்தான் அதிகபட்சமாக 994 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதற்கேற்ற இட வசதி இங்கு இல்லை. இங்கு வழக்கறிஞர்களுக்கு சுமார் 30 இருக்கைகள் உள்ளன. வாதி, பிரதிவாதிகள் 8 பேர் அமருவதற்கு மட்டுமே இருக்கைகள் உள்ளன. இதனால், விசாரணையின்போது வழக்கறிஞர்களும், வாதி பிரதிவாதிகளும் நீண்ட நேரம் நிற்க வேண்டியுள்ளது.

மேலும், இங்கு விசாரிக்கப்படும் வழக்குகளில் அதிக அளவு கேரளத்தை சேர்ந்தது. 2-ம் இடத்தில் கர்நாடகமும், 3-ம் இடத்தில் தமிழகமும் உள்ளன. வழக்குக்காக கேரளம், கர்நாடகத்தில் இருந்து வரும் வழக்கறிஞர்கள் சென்ட்ரல் வந்து அங்கிருந்து அரும்பாக்கம் செல்ல சிரமப்படுகின்றனர்.

தமிழக வழக்கறிஞர்களும் இங்கு ஆஜராகி விட்டு, உயர் நீதிமன்றம் செல்வதற்கு தாமதமாவதாகக் கூறுகின்றனர். எனவே, உயர் நீதிமன்றத்துக்கு அருகிலேயே பசுமைத் தீர்ப்பாய தென்னிந்திய அமர்வை அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரிவந்தனர்.

இவற்றைக் கருத்தில் கொண்டு, பசுமைத் தீர்ப்பாய அலுவலகத்துக்கு புதிய இடமாக சேப்பாக்கத்தில் பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் உள்ள ‘கலாஸ் மகால்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பசுமைத் தீர்ப்பாய அலுவலகத் துக்கு இடம் ஒதுக்குவது தொடர்பாக பசுமைத் தீர்ப்பாய நிர்வாகம் - தமிழக அரசு இடையே சமீபத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. சேப்பாக்கத்தில் பொதுப்பணித் துறை வளாகத்தில் உள்ள கலாஸ் மகால் தரைதளத்தை வழங்கவேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாய நிர்வாகம் கோரியது.

சேப்பாக்கம் பேலஸின் ஒரு பகுதியான கலாஸ் மகால் 1768ல் இந்தோ-சார்சனிக் கட்டிடக் கலையில் கட்டப்பட்டது. கடந்த 2012ம் ஆண்டு தீப்பிடித்து சேதமடைந்த இக்கட்டிடம் தற்போது ரூ.14 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பாரம்பரியக் கட்டிடம் என்பதால் பழமை மாறாமல் புதுப்பித்து வருகிறோம். பணிகள் 2016 டிசம்பரில் நிறைவடையும். இது 30 ஆயிரம் சதுர அடி பரப்பு கொண்டது. பசுமைத் தீர்ப்பாயத்தின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித் துறை சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு முடிவெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x