Published : 21 Dec 2014 10:48 AM
Last Updated : 21 Dec 2014 10:48 AM
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக தமிழக மீனவர்கள் 66 பேரை, இலங்கை அரசு விடுதலை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த 16-ம் தேதி, தங்களுக்கு எழுதிய கடிதத்தில், தமிழக சிறையில் இருக்கும் 30 இலங்கை மீனவர்களை கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு தயாராக இருக்கிறது. அவர்களின் 19 படகுகளையும் 22-ம் தேதி விடுவிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’ என தெரிவித்திருந்தேன்.
இதன்மூலம் இலங்கை மீனவர்கள் தங்கள் தாய் நாட்டுக்கு திரும்பி, குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட முடியும். இதற்கு மாற்றாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட வசதியாக இலங்கை சிறையில் வாடும் 66 தமிழக மீனவர்களையும் அவர்களது 81 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
இதற்கிடையே, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இருந்து ஒரு கடிதம் எங்களுக்கு கிடைத்தது. இலங்கை சிறையில் உள்ள 66 மீனவர்களை மட்டும் விடுவிக்க அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் 81 படகுகளை விடுவிப்பது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
கடந்த ஜூன் முதல் இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். மீனவர்களின் படகுகள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படாமல் இருக்க, உடனடியாக அவற்றை விடுவிக்க வேண்டுகோள் விடுத்தார். தற்போது இலங்கை அரசு அந்தப் படகுகளை விடுவிக்க விரும்பாதது ஏமாற்றம் அளிக்கிறது.
ஆனாலும், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழக அரசு பெருந்தன்மையுடன் 30 இலங்கை மீனவர்களை 22-ம் தேதி விடுதலை செய்கிறது. அதேநேரம், இலங்கை சிறையில் உள்ள 66 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT