Published : 11 Dec 2014 10:35 AM
Last Updated : 11 Dec 2014 10:35 AM

மத்திய அரசின் கிராம வளர்ச்சித் திட்டம்: 9 தமிழக எம்.பி.க்கள் இன்னும் கிராமங்களைத் தேர்வு செய்யவில்லை

மத்திய அரசின் கிராம வளர்ச்சித் திட்டத்தில் கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் இருவர் உட்பட 9 பேர் இன்னும் கிராமங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. இந்தியா முழுவதும், 205 எம்.பி.க்கள் கிராமங்களைத் தேர்வு செய்யாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு எம்.பியும் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டது.

மக்களவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்குள்ளும், மாநிலங்களவை எம்.பி.க்கள் தங்கள் மாநிலத்துக்குள்ளும், நியமன உறுப்பினர்கள் நாட்டில் ஏதாவது பகுதியிலும் கிராமத்தை தேர்வு செய்யலாம். இதன்படி எம்.பி.க்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த கிராமங்களின் பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள் மூலம் மாநில ஊரக வளர்ச்சித் துறைக்கு அனுப்பி, பின்னர் மத்திய ஊரக வளர்ச்சித் துறையிடம் அங்கீகாரம் பெற்று வருகின்றனர்.

கிராமங்களைத் தேர்வு செய்வதற்கான காலக்கெடு கடந்த நவம்பர் 11-ம் தேதி முடிவடைந்தது. இதுபற்றி மத்திய அரசின் சார்பில் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியபின், எம்.பி.க்கள் வேகமாக தங்கள் கிராமங்களை தேர்வு செய்து வருகின்றனர்.

டிசம்பர் 10-ம் தேதி நிலவரப்படி மொத்தமுள்ள மக்களவை எம்.பி.க்கள் 541 பேரில் 430 பேர் கிராமங்களைத் தேர்வு செய்துள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யாத 111 எம்.பி.க்களின் பட்டியலில் தமிழகத்தில் அதிமுக வைச் சேர்ந்த ஈரோடு செல்வக் குமார சின்னையன், பொள்ளாச்சி சி.மகேந்திரன், கோவை பி.நாகராஜன், ராமநாதபுரம் அன்வர் ராஜா, திருப்பூர் வி.சத்யபாமா, வடசென்னை டி.ஜி.வெங்கடேஷ் பாபு ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இதேபோல், மாநிலங் களவையின் 230 எம்.பி.க்களில் 136 எம்.பி.க்கள் கிராமங்களைத் தேர்வு செய்துள்ளனர். தேர்வு செய்யாதவர்கள் பட்டியலில் 94 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 3 எம்.பி.க்களும் அடங்குவர்.

அதிமுகவின் முத்துக்கருப்பன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் இன்னும் கிராமங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. திமுகவின் திருச்சி சிவா திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகிலுள்ள எங்கன் என்ற கிராமத்தை தற்போது தேர்வு செய்துள்ளார்.

அதிமுகவிலுள்ள 11 மாநிலங்களவை எம்.பி.க்களில் ஒன்பது பேர் தருமபுரி மாவட்டத்திலுள்ள கிராமங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், தர்மபுரி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றார். இந்த நிலையில், அந்த மாவட்டத்தின் கிராமங்களை அதிமுக எம்.பி.க்கள் ஒன்பது பேர் தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுப்பு அதிகாரி நியமனம்

மாநில ஊரகத்துறை செயலர்களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி மத்திய அரசின் மூலம் அனுமதி பெறப்பட்ட அனைத்து எம்.பி.க்களின் கிராமங்களுக்கும், மாநில ஊரக வளர்ச்சித் துறையிலிருந்து தனித்தனியே பொறுப்பு அதிகாரி மூன்று தினங்களில் நியமிக்கப்பட வேண்டும். இதுகுறித்து கிராமங்கள் மற்றும் அதன் அதிகாரிகளின் விவரங்களை மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். அந்த அதிகாரியின் மூலம் திட்டங்களை செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x