ஜோதிடத்தை நம்பியதால் விபரீதம்: முதியவரை கொன்ற மனைவி

ஜோதிடத்தை நம்பியதால் விபரீதம்: முதியவரை கொன்ற மனைவி
Updated on
1 min read

பெரியபாளையம் கன்னிகைப் பேரை சேர்ந்தவர் கதிர்வேல் (70). அரிசி மொத்த வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி (60). மகன், மருமகள் மற்றும் பேத்தியுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். கதிர்வேல் தனது பேத்தியிடமும் மருமகளிடமும் பாசத்துடன் இருந்தார். இது விஜயலட்சுமிக்கு பிடிக்க வில்லை. இதனால் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி ஜோசியம் பார்க்கச் சென்றார். அப்போது ஜோசியர், உன் கணவர் உன்னை விட்டு சென்று விடுவார். அவருக்கு இன்னொரு மனைவி பாக்கியம் உள்ளது’ என்று கூறினாராம்.

இதனால் மன உளைச்சல் அடைந்த விஜயலட்சுமி வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை 5 மணிக்கு எழுந்த விஜயலட்சுமி அரிவாளை எடுத்து தூங்கிக் கொண்டு இருந்த தனது கணவரை சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்த பெரியபாளையம் போலீஸார் விரைந்து சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழக்குப் பதிவு செய்து விஜயலட்சுமியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

ஜோசியம் போன்ற மூட நம்பிக்கையால் இப்படி ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பெரியபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in