Published : 26 Dec 2014 08:35 AM
Last Updated : 26 Dec 2014 08:35 AM

இடிந்த கட்டிடத்துக்கு அருகே உள்ள மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டிடத்தை ஜனவரியில் இடிக்க முடிவு

மவுலிவாக்கத்தில் இடிந்துவிழுந்த கட்டிடத்தின் அருகே உள்ள மற்றொரு 11 மாடிக் கட்டிடம் அடுத்த மாதம் இடிக் கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான இடிப்பு நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் பிரைம் ஸ்ருஷ்டி என்ற தனியார் கட்டுமான நிறுவனம் 11 மாடிகளைக் கொண்ட 2 கட்டி டங்களைக் கட்டியது. இந்த கட்டிடங் களுக்கு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) 2013-ம் ஆண்டு ஜூன் மாதம்தான் அனுமதி அளித்தது. எந்தவித பாதுகாப்பு விதிகளையும் பின்பற்றாமல் அவசர அவசரமாக இந்த 2 கட்டிடங்களும் கட்டப்பட்டன. கட்டுமானப் பணிகள் நடந்துவந்த நிலையில், 11 மாடி கட்டிடம் ஒன்று கடந்த ஜூன் 28-ம் தேதி மாலை திடீரென இடிந்து விழுந்தது.

கனமழை பெய்ததால், கட்டிடத்தின் கீழே மழைக்கு ஒதுங்கி நின்ற கட்டுமானத் தொழிலாளர்கள் 61 பேர் இடிபாடுகளில் சிக்கி இறந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்தது. கட்டுமானத் தொழிலாளர்கள், கட்டிடத்தின் அருகில் வசித்தவர்கள், விபத்தை பார்த்தவர்கள், கட்டிட உரிமையாளர், கட்டிடத்தில் வீடு வாங்க பதிவு செய்தவர்கள் என அனைவரிடமும் நீதிபதி ரகுபதி விரிவான விசாரணை நடத்தினார். 930 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அரசிடம் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி சமர்ப்பித்தார்.

இந்நிலையில், விபத்துக்குள்ளான கட்டிடத்தின் அருகே உள்ள மற்றொரு 11 அடுக்குமாடிக் கட்டி டம் மற்றும் 500 மீட்டர் சுற்றளவு வரையிலான இடத்தை ஆபத்தான பகுதியாக சிஎம்டிஏ அறிவித்தது. அதன் அருகில் இருந்தவர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கட்டிடத்தை விரைவில் இடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, 11 மாடிக் கட்டிடத்தை இடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை சிஎம்டிஏ மேற்கொண் டுள்ளது. கட்டிடத்தை இடிக்கும் பணியை ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

சுற்றுப்பகுதியில் உள்ளவர் களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மிகவும் பாதுகாப்பாக, அதிநவீன கருவிகளைக் கொண்டு, கட்டுமான இடிபாட்டில் அனுபவம் உள்ள தனியார் நிறுவனம் மூலம் கட்டிடத்தை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான டெண்டரை சிஎம்டிஏ கடந்த 18-ம் தேதி அறிவித்துள்ளது. வரும் 30-ம் தேதிக்குள் தனியார் நிறுவனத்தை தேர்வு செய்து, இடிக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x