Published : 12 Dec 2014 11:00 AM
Last Updated : 12 Dec 2014 11:00 AM

37 மீனவர்களை விடுவித்தது இலங்கை

நடுக்கடலில் நேற்று அதிகாலை தமிழக மீனவர்கள் 37 பேரை கைது செய்து, அவர்களது 8 விசைப்படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, சில மணி நேரங்களிலேயே மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவித்தது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினம் ஆகிய இடங்களிலிருந்து 1000-க்கும் அதிகமான விசைப்படகுகளில், 4000-க்கும் அதிகமான மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர்.

கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே நேற்று அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற் படையினர் 6 விசைப்படகுகளில் இருந்த ஜெகதாப்பட்டினம் மீனவர் கள் 27 பேரை கோபுரத்தீவுக்கும், 2 விசைப்படகுகளில் இருந்த ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் 10 பேரை தலைமன்னார் கடற் படைத் தளத்துக்கும் கைது செய்து அழைத்துச் சென்றனர். விசைப் படகுகளையும் பறிமுதல் செய் தனர். ராமேசுவரம் மீனவர்களை கைது செய்தபோது, இலங்கை கடற் படையினர் நடத்திய தாக்குதலில் ஒரு விசைப்படகு சேதமடைந்தது.

முன்னதாக, கடந்த செவ்வாய்க் கிழமை இலங்கை அதிபர் ராஜபக்ச திருப்பதி வந்தபோது, தமிழக மீனவர்கள் 43 பேரை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்ததற்கு மத்திய, மாநில அரசுகள் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை கைது செய்த மீனவர்கள் 37 பேரையும் காலை 9 மணியளவில் விடுதலை செய்தனர். விசைப்படகுகளையும் விடுவித்தனர்.

மீனவர்கள் வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 81 மீனவர்களையும், 87 விசைப்படகு களையும் விடுவிக்க வலியுறுத்தி புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர் மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நேற்று தொடங்கி யுள்ளனர்.

இதற்கிடையே கன்னியாகுமாரி அருகே செப். 25-ம் தேதி 2 படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள் 12 பேரை இந்திய கடலோரக் காவல் படையினர் கைது செய்தனர். அவர்களது நீதிமன்றக் காவல் நேற்று முடி வடைந்ததால், அனைவரும் ராமநாதபுரம் தலைமைக் குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயராஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர் களின் காவலை டிச. 23-ம் தேதி நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

படகு மூழ்கியது: 4 மீனவர்கள் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 252 விசைப் படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அதில், செல்வநாதன், ஸ்டீபன்ராஜ், நம்பிராஜ், ஜானகிராமன் ஆகியோர் சென்ற விசைப்படகு நடுக்கடலில் பழுதாகி மூழ்கியது. இதுகுறித்து அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த மற்றொரு படகு மூலம் 4 மீனவர்களும் மீட்கப்பட்டு நேற்று கரை திரும்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x