Published : 07 Dec 2014 09:54 AM
Last Updated : 07 Dec 2014 09:54 AM

ஓசூர் அருகே 65 காட்டு யானைகள் முகாம்: பனியால் விரட்டும் பணி பாதிப்பு, விவசாயிகள் அச்சம்

ஓசூர் வனப்பகுதியில் 35 காட்டு யானைகள் முகாமிட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் மேலும் 30 யானைகள் இடம் பெயர்ந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வெளியேறி தமிழகத்துக்குள் நுழைந்து ஓசூர், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி வனப்பகுதி வழியாக ஆந்திராவுக்கு இடம் பெயறும். அவ்வாறு வரும் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கர்நாட காவில் இருந்து தமிழகம் வழியாக ஆந்திராவுக்கு புறப்பட்டன. இதில் 65 யானைகள் மீண்டும் கர்நாடகாவுக்கு வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் மீண்டும் யானைகள் தேன்கனிக் கோட்டை, ஓசூர் வனப்பகுதிக்கு வர ஆரம்பித்தது. முதலில் 2 குட்டி களுடன் 4 காட்டு யானைகள் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ் சாலையைக் கடந்த கோபசந்திரம் பகுதியில் முகாமிட்டது. பின்னர் 35 காட்டு யானைகள் வனத்துறையினர் தடுப்புகளை மீறி சானமாவு காட்டுக்கு வந்தது. இரவு நேரங்களில் காட்டிலிருந்து வெளியேறும் யானைகள் விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் அச்சத்துக்கு உள்ளாகி உள்ளனர். தற்போது ஓசூர் பகுதியில் கடும் பனிபொழிவு இருப்பதால் யானைகள் விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ராயக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், ஓசூர் சானமாவு வனப்பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளன. சானமாவு வனப் பகுதியில் தற்போது சுமார் 65-க் கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளதால், இரவு நேரங்களில் வனத்துறையினர் ரோந்து பணியை அதிகரித்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வன ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் குழுவினர் இணைந்து இரண்டு நாட்களுக்குள் யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் வனப்பகுதியையொட்டி வசிப் பவர்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது, என்றனர். 65 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x