Published : 02 Dec 2014 08:25 AM
Last Updated : 02 Dec 2014 08:25 AM

அரசு மருத்துவமனை அலட்சியத்தால் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் வீண்: தருமபுரியில் தானம் தர குடும்பத்தினர் முன்வந்தும் பலனில்லை

தருமபுரியில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை தானம் அளிக்கும் முயற்சி, அரசு மருத்துவமனை அலட்சியத்தால் நிறைவேறாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னா கரம் வட்டம் கொட்டாயூரைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழி லாளி சிவலிங்கம் (50). இவர் நேற்று முன் தினம் காலை பென்னா கரம்-பெரும்பாலை செல்லும் சாலையில் விபத்தில் சிக்கினார். விபத்தின்போது இவரது பின் தலையில் அடிபட்டதால் கோமா நிலைக்குச் சென்றார்.

விபத்தில் சிக்கிய இவர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர அறுவை சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, சில மணி நேரத்துக்குப் பிறகு, ‘காப்பாற்றுவது கடினம் எடுத்துச் சென்றுவிடுங்கள்’ என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சோகம் நிறைந்த அந்தச் சூழலிலும் நிதானமாக சிந்தித்த அவரது குடும்பத்தார், சிவலிங்கத் தின் உடலில் உள்ள உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக மருத்துவர்களிடம் ஞாயிறு மதியம் சுமார் 2 மணியளவில் தெரிவித் துள்ளனர். பணியில் இருந்த மருத்துவர்கள், உயர் அதிகாரிகளி டம் பேசிவிட்டு இதுதொடர்பாக பதில் அளிப்பதாகக் கூறியுள்ளனர்.

ஆனால் இரவு 9 மணி வரை அவர்களிடம் இருந்து முறையான பதிலோ, வழிகாட்டுதலோ கிடைக்க வில்லை. சிவலிங்கத்தின் உறுப்பு களை தானம் தர குடும்பத்தார் முன்வந்தும் முடியாத சூழல் நிலவுவது குறித்து ‘தி இந்து’வுக்கு இரவு 9.15 மணிக்குத் தெரியவந்தது. இந்தத் தகவல் ‘தி இந்து’ சார்பில் தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயண பாபுவுக்கு தெரிவிக்கப்பட்டபோது, ‘விபத்தில் சிக்கியவர் மூளைச்சாவு அடைந் துள்ளாரா என்பதை அறிந்து கொள்ளும் வசதி தருமபுரியில் இல்லை. உறுப்புகளை எடுக்கும் நிபுணர்களும் வெளியில் இருந்து தான் வரவேண்டும். இருப்பினும் இதுகுறித்து ஆலோசித்து நட வடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

அவர் அளித்த பதிலில் தருமபுரி அரசு மருத்துவமனையின் வசதி யின்மை சூழல் புலப்பட்டதால், தமிழக சுகாதாரத் துறை முதன் மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கவனத்துக்கு ‘தி இந்து’ சார்பில் இந்தத் தகவல் எடுத்துச் செல்லப் பட்டது. தகவல் அறிந்த உடன் அவர், ‘விபத்தில் சிக்கியவரின் உடல் உறுப்புகளை தானம் பெற தேவையான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும்’ என்று உறுதி அளித்தார். அதன் படியே அடுத்த சில நிமிடங்களில் அதற்கான பணிகள் தொடங்கின.

‘சிவலிங்கம் மூளைச் சாவு அடைந்து விட்டாரா என்பதை சோதிக்கும் இஇஜி (எலக்ட்ரோ என்செப்ளோ கிராஃபி) என்ற சோதனைக்காக சேலத்தில் இருந்து நிபுணர்கள் வரவழைக் கப்பட்டுள்ளனர்.

மேலும், உறுப்புகளை உடலில் இருந்து எடுக்க பயிற்சி பெற்ற நிபுணர்கள் சென்னையில் இருந்து வர தயாராகியுள்ளனர். முதலில் அவருக்கு இஇஜி சோதனை நடத்தி 6 மணி நேர இடைவெளியில் மீண்டும் ஒருமுறை அதே சோதனை செய்யப்படும். இரு சோதனையிலும் அவர் மூளைச் சாவு அடைந்திருப்பது உறுதி யானால் மட்டுமே உறுப்புகள் தானமாக பெறப்படும். மேலும், உறுப்புகளை தானமாகப் பெற தேவையான சட்டப்படியான முன்னேற்பாடுகளும் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன’ என்ற ஆறுதலான தகவல் நேற்று முன்தினம் இரவு சுமார் 9.50 மணியளவில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் மூலம் அளிக்கப்பட்டது.

பின்னர் இரவு 10.50 மணி அளவில், சிவலிங்கம் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறிய மருத்துவர்கள், நேற்று அதிகாலை 4 மணியளவில் சிவலிங்கம் உயிர் பிரிந்தது எனத் தெரிவித்துள்ளனர். உடல் உறுப்புகளை தானம் தர அவரது குடும்பத்தார் விரும்பியபோதும் தானம் தர முடியாத நிலை ஏற்பட்டதால் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

‘மரணத்தின் பிடியில் இருப்போருக்கு மறுவாழ்வு கிடைத்திருக்கும்'

சிவலிங்கத்தின் உறவினர்கள் கூறும்போது, ‘30-11-2014 அன்று மதியம் சுமார் 2 மணியளவில் சிவலிங்கத்தின் பயனுள்ள உறுப்புகள் அனைத்தையும் தானம் தர அவரது குடும்பத்தார் மருத்துவர்களிடம் முழு விருப்பம் தெரிவித்து விட்டனர். சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் கவனத்துக்குத் தகவல் சென்ற பிறகு மருத்துவத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் வேகத்தை ஞாயிறு மதியமே காட்டியிருந்தால் சிவலிங்கம் மரணம் அடைவதற்குள் அவரது உறுப்புகளை தானமாகப் பெற்றிருக்க முடியும். அதன்மூலம் மரணத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் மறுவாழ்வு பெற்றிருப்பர். கிராமத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் அவரது குடும்பத்தார் விசாலமாக சிந்தித்தனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் சிவலிங்கத்தின் உறுப்புகள் அனைத்தும் தற்போது வீணாகி விட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற அலட்சியம் நிகழாமல் தடுக்க, தற்போதைய சம்பவத்துக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x