Published : 22 Dec 2014 09:20 PM
Last Updated : 22 Dec 2014 09:20 PM
டீசல் விலை குறைந்த போதிலும், ரயில் கட்டணத்தை குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் பேசிய செய்தியாளர்கள், எரிபொருள் விலைக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயிக்கும் திட்டத்தின் அடிப்படையில், அடுத்ததாக மாற்றி அமைக்கப்படும் கட்டண விகிதம் குறைய வாய்ப்புள்ளதா என்று கேள்வி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, “கடந்த சில மாதங்களாக டீசல் விலை குறைந்து வருவது உண்மைதான். ஆனால், அதற்கு முன்பு டீசல் விலை அதிகமாகவே இருந்தது. ஏற்கெனவே ரயில்வே பயணிகளுக்கு குறைந்த கட்டணம்தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, கட்டண நிர்ணயத்தில் மாற்றம் இருக்காது.
ரயில்வே வருவாயில் மூன்றில் 2 பங்கு சரக்கு கட்டணத்தின் மூலமும், ஒரு பங்கு பயணிகள் கட்டணத்தின் மூலமும் கிடைக்கிறது. ரயில்வே நிதி நிலைமை மோசமாக இருக்கிறது. அதை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தி, அதற்கான செலவினத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். சூரிய மின்சக்தி, காற்றாலை மின் சக்தியை அதிக அளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு சுரேஷ் பிரபு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT