Published : 14 Dec 2014 10:40 AM
Last Updated : 14 Dec 2014 10:40 AM

போலீஸாருக்கு ரூ.40 லட்சம் லஞ்சம் கொடுத்து கொலை கைதி வெளிநாடு தப்பி ஓட்டம்

திருச்சி மத்திய சிறையில் அடைக் கப்பட்டிருந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள பத்ராக் கோட்டையைச் சேர்ந்த 29 வயதே ஆன சிறைக் கைதி தவமணி, நீதிமன்ற விசாரணைக்குச் சென்று விட்டு திரும்பி வந்தபோது போலீஸாருக்கு ரூ.40 லட்சம் கொடுத்துவிட்டு மனைவியுடன் வெளிநாடு தப்பிச்சென்றுவிட்டார்.

டிஎன்பிஎஸ்சி வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர் பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தவமணி அங்கே சிறைத் துறை அதிகாரிகளின் செல்லப் பிள்ளையாக நல்ல கவனிப் புடன் நாட்களைக் கடத்தி வந்துள்ளார். விசாரணைக்காக நீதிமன்றங் களுக்குச் செல்லும்போது உடன் வரும் போலீஸாருக்கு நல்ல சன்மானம் தவமணி தரப்பி னரால் வழங்கப்படும் என்பதால் இவரை எஸ்கார்ட் எடுக்க போலீஸாரிடையே பலத்தபோட்டி இருக்குமாம்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இளம்பெண் ஒருவரை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தவமணி முக்கியக் குற்றவாளி. இந்த வழக்கு விசாரணைக்காக திருச்சியில் இருந்து புனே நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டு திரும்பி வரும்போது கடந்த நவம்பர் 27-ம் தேதி கர்நாடக மாநிலம் குல்பர்கா அருகே ரயிலிலிருந்து குதித்து தப்பியோடியதாக அவருக்கு பாதுகாப்புக்காக உடன் சென்ற ஆயுதப்படை எஸ்ஐ இளங்கோவன் உட்பட 5 பேர் திருச்சி போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

5 போலீஸார் பணியிடை நீக்கம்

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் நடத்திய விசாரணையில், தவமணியின் மனைவியிடம் ரூ.40 லட்சம் பெற்றுக்கொண்டு அவரை ஆயுதப்படை போலீஸார் தப்பிக்கச் செய்தது தெரியவந்தது. இதையடுத்து 5 போலீஸாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

காவல்துறை அதிர்ச்சி

இதற்கிடையே தவமணி தப்பிக்க உதவிய ரவுடிகள் 2 பேரை கடந்த சில தினங்களுக்கு முன்பு பிடித்து திருச்சி மாநகர போலீஸார் விசாரித்தபோது, தவமணி தனது மனைவியுடன் வெளிநாடு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற தகவல் தெரியவந்ததால் காவல்துறை வட்டாரம் அதிர்ச்சிய டைந்துள்ளது.

டிசம்பர் 7-ம் தேதி மதுரையில் இருந்து ராமேசுவரம் சென்று அங்கிருந்து வெளிநாடு சென்றிருக் கலாம் என்று தெரியவந்துள்ள தகவலை மறுப்பதற்கில்லை என்கிறது காவல்துறை வட்டாரம்.

புனே சிறைக்குச் சென்றால், திருச்சியில் கிடைப்பது போன்ற கவனிப்பு கிடைப்பது சந்தேகம் என்ற அச்சத்தாலேயே தவமணி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x