Published : 23 Dec 2014 03:27 PM
Last Updated : 23 Dec 2014 03:27 PM

மின்சார சட்டதிருத்த மசோதாவை திரும்பப் பெறுக: பிரதமருக்கு முதல்வர் ஓ.பி.எஸ். கடிதம்

மின்சார சட்டதிருத்த மசோதாவை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், இவ்விவகாரத்தில் மாநில முதல்வர்களுடன் உரிய ஆலோசனை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மின்சார விநியோக நிறுவனத்தை நுகர்வோர் தேர்வு செய்து கொள்ள வசதி அளிக்கும் வகையிலான மின்சார சட்டதிருத்த மசோதா மக்களவையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அப்போது, மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத் துறையில் போட்டியை அதிகரிப்பது, மின்சார இயக்கப் பணிகளில் திறனை மேம்படுத்துவது, தரம் மற்றும் மின்உற்பத்தியை அதிகரிப்பது ஆகியவை இந்த மசோதாவின் நோக்கம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மின் நுகர்வோர் பயன்பெறும் வகையில் விரும்பிய விநியோக நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து சேவை பெறும் வசதியும் மின்சார சட்ட திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "மின்சார சட்டதிருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்த மசோதாவை தன்னிச்சையாக அரசு தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

பொதுத்துறை மின் பகிர்மான நிறுவனங்கள் ஏற்கெனவே ஏற்படுத்தியுள்ள மின் தடத்தையே தனியாரும் பயன்படுத்திக் கொள்ள இந்த மசோதா வகை செய்கிறது. இதன் மூலம் தனியார் நிறுவங்கள் எந்தவித பராமரிப்புச் செலவோ, மூலதனமோ இல்லாமலேயே பொதுத்துறை மின் தடத்தை பயன்படுத்த வழி ஏற்படுகிறது.

மேலும், பெரிய தொழிற்சாலைகள், நிறுவங்களை தங்கள் வாடிக்கையாளர்களாக பெற தனியார் மின் நிறுவனங்களுக்கு வாய்ப்பு ஏற்படும். மத்திய அரசின் இந்த கொள்கையால் மாநில மின் வாரியங்கள் மேலும் நிதி நெருக்கடி ஆளாகும் நிலை ஏற்படும்.

எனவே, மின்சார சட்டதிருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறுவதோடு, இச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்க வேண்டும்" என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x