Published : 19 Dec 2014 03:32 PM
Last Updated : 19 Dec 2014 03:32 PM

தண்ணீரில் தத்தளித்தேன்: நடிகை ஆனந்தியுடன் சந்திப்பு

பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போன்ற தோழமையான முகத்துடன் பொறியாளன் படத்தில் அறிமுகமானவர் ஆனந்தி. பிரபு சாலமன் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் கயல் படத்தின் கதாநாயகி. வெற்றிமாறன் இயக்கி வரும் ‘விசாரணை’ படத்திலும் ‘வாகை சூடவா’ புகழ் சற்குணம் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ‘‘ஒரே ஒரு படம்தான், முழுசா தமிழ்பேசக் கத்துக்கிட்டேன். இப்போ எழுத்துக் கூட்டி என்னால தமிழ் படிக்கவும் முடியும்’’ என்று ஆச்சரியப்படுத்தியபடி பேச ஆரம்பித்தார்...

சினிமாவுக்கு எப்படி வந்தீங்க?

ரியாலிட்டி ஷோ வழியாகத்தான் சினிமாவுக்கு வந்தேன். ஆந்திராவில் உள்ள கடப்பாதான் சொந்த ஊர். அப்பா அம்மா வெச்ச பேர் ரக்‌ஷிதா. சின்ன வயசுலேர்ந்து டான்ஸ்ல ரொம்ப ஆர்வம். முறையாக பரதமும் வெஸ்டர்னும் கத்துக்கிட்டேன். ஏழாம் வகுப்பு படிக்கிறப்போ ஜி டிவியில ‘அட்டா ஜூனியர்’ன்னு ஒரு டான்ஸ் ரியாலிட்டி ஷோவுல கலந்துகிட்டு டாப் ஃபைவா வந்தேன். அப்புறம் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறப்போ மா டிவியில் ‘சேலஞ்ச்’ன்னு ஒரு டான்ஸ் ரியாலிட்டி ஷோ. அதுலயும் வின்னர் நான்தான்.

என்னை இந்த நிகழ்ச்சியில பார்த்த தெலுங்கு டைரக்டர் மாருதி தசரி சார் ‘பஸ் ஸ்டாப்’ படத்துல அறிமுகப்படுத்துறேன்னு கேட்டார். அப்பா விடல. அவர் ஜூவல்லரி வெச்சிருக்கார். அம்மா பியூட்டிஷியன். “நாங்க சம்பாதிக்கிறதே போதும் நீ சினிமாவுக்குப் போக வேணாம்னு சொன்னாங்க. ஆனால் நான் டல்லா இருந்ததைப் பார்த்துட்டு, எவ்வளவு பணம் கொடுத்தாலும் செக்ஸியா நடிக்க வேணாம்ன்னு ஓகே சொன்னாங்க. அப்படித்தான் சினிமாவுக்கு வந்தேன். தெலுங்கு ஃபீல்டுல ஏற்கனவே ரக்‌ஷிதான்னு ஆக்ட்ரஸ் இருந்ததால, ஹாசிகான்னு பேரை மாத்திட்டார். தமிழ்ல ஆனந்தி ஆக்கிட்டாங்க.

தமிழில் பொறியாளன், கயல் இரண்டு படங்கள்ல எதில் முதல்ல அறிமுகமானீங்க?

பொறியாளன் படத்துலதான் முதல்ல அறிமுகமானேன். அந்தப் படத்தோட ஷூட்டிங் பத்து நாள் முடிஞ்சப்போ பிரபு சாலமன் சார் ஸ்கிரீன் டெஸ்டுக்குக் கூப்பிட்டார். நான் தமிழ் மைனா, கன்னட மைனா பார்த்து ஏற்கனவே அவர் ஃபேன். கும்கியில வர்ற “அய்யய்யோ ஆனந்தமே…” பாட்டை அர்த்தம் தெரியாமலே பாடிகிட்டு இருப்பேன். எப்படியாவது செலக்ட் ஆகிடணும்னு பிரே பண்ணிகிட்டேன்.

எனக்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டும் போட்டார். ஷூட்டிங் ஸ்பாட்ல அத்தனை பேரும் உங்ககிட்ட தமிழ்தான் பேசுவோம். ஏன்னே முதல் ஷெட்யூல் முடியுறதுக்குள்ள நீ தமிழ் கத்துக்கணும். நீதான் உன்னோட கேரக்டருக்குக் குரல் கொடுக்கணும்னு கறாரா சொல்லிட்டார். முதல்ல ஒரு பத்து நாள் ரொம்ப கஷ்டமா இருந்தது. அதுக்குக் கைமேல பலன் கிடைச்சது. உதவி இயக்குநர்கள் உதவியோட நல்ல தமிழ் பேசவும் படிக்கவும் கத்துக்கிட்டேன்.

பிரபு சாலமன் கதை சொன்னாரா? உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டார்னு செய்திகள் வெளியாச்சே?

ஆரம்பத்துல கதை சொல்லல. மேகாலயாவுல இருக்கிற சிரபுஞ்சிக்குப் படப்பிடிப்புக்காகப் போனோம். அங்கேதான் என்னோட கேரக்டரைப் பத்திச் சொன்னார். கண் கலங்கிட்டேன். பிரபு சாலமன் என்னைக் கஷ்டப்படுத்தல. சுனாமி வர்றப்போ தத்தளிக்கிற மாதிரி காட்சி. அதை எடுக்கறதுக்காகப் பெரிய டேங் கட்டினாங்க. அதுல படப்பிடிப்பு நடந்த எல்லா நாளும், மொத்த டீமும் ஆறு மணி நேரம் தண்ணியிலேயேதான் இருந்தாங்க.

நான் மட்டும் குளிருதுன்னு சொல்லிட்டு கேரவன்ல போய் உட்கார்ந்துக்க மனசில்ல. நானும் அதே தண்ணியில காலையிலேர்ந்து சாயங்காலம் வரைக்கும் தத்தளிச்சேன்னு சொல்லணும். அப்படிக் கஷ்டப்பட்டாலும் அது ரொம்ப பிடிச்சிருந்தது. அப்புறம் சிரபுஞ்சில இயற்கையா இருந்த ஒரு ரூட் ப்ரிஜ்ல என்னை மட்டும் ஏத்தி விட்டுட்டாங்க. அப்போ ரொம்ப பயந்தேன். அதைப் பார்த்துட்டு பிரபு சாலமன் சார் எனக்குத் தைரியம் கொடுத்துக்கிட்டே இருந்தார். அதை மறக்க முடியாது.

வெற்றிமாறன் படத்துல என்ன கேரக்டர் பண்றீங்க?

அதைச் சொன்னா நான் தீர்ந்தேன். அட்டக்கத்தி தினேஷூக்கு ஜோடியா நடிக்கிறேன். சற்குணம் சார் படத்துல அதர்வா முரளி ஹீரோ. அதுல என்னோட கேரக்டர் பேர் தாமரை. இரண்டு கேரக்டருமே எனக்குப் பேர் வாங்கிக் கொடுக்கும். கயல் படத்துல ஹீரோ சந்திரனோட போட்டி போட்டு நடிச்சிருக்கேன்.

உங்ககிட்ட உங்களுக்குப் பிடிச்சது என்ன?

எங்கிட்ட மத்தவங்களுக்குப் பிடிச்சது கண்கள்ன்னு சொல்றாங்க. இது சின்ன வயசுலேர்ந்து எல்லாரும் சொல்றதுதான். ஆனா எனக்கு ரொம்ப பிடிச்சது என்னோட பிளாக் ஸ்கின் டோன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x