Published : 03 Dec 2014 09:27 AM
Last Updated : 03 Dec 2014 09:27 AM

காஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்: கோரிக்கை ஏற்றதால் சங்கத்தினர் அறிவிப்பு

காஸ் டேங்கர் லாரி உரிமையாளர் களின் கோரிக்கை பரிசீலனை செய்வதாக ஆயில் நிறுவனத்தினர் உறுதியளித்ததை அடுத்து வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

நாமக்கல்லை தலைமையிட மாக கொண்ட தென் மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர் கள் சங்கத்தில் 4 ஆயிரம் காஸ் டேங்கர் லாரிகள் உள்ளன. ஒப்பந்த அடிப்படையில், காஸ் கொண்டு செல்லும் பணியில் இந்த டேங்கர் லாரிகள் ஈடுபடுத்தப்படுகின்றன. இவ்வற்றுக்கான ஒப்பந்த காலம் மூன்றாண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். அதன்படி கடந்த அக்டோபர் 31-ம் தேதியுடன் காஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்த காலம் நிறைவடைந்தது. அதையடுத்து புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் பிழைகள் இருப்பதாக கூறி 38 லாரிகளுக்கு மட்டும் வாடகை ஒப்பந்தம் வழங்காமல் ஆயில் நிறுவனத்தினர் நிறுத்தி வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் கடந்த 1-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்தனர்.

அதையடுத்து நேற்று சென்னை ஐஓசி நிறுவனத்தில், அதன் பொதுமேலாளருடன், தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து, வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப் பட்டது.

இதுகுறித்து தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர் கள் சங்கத் தலைவர் பி. நடராஜன் கூறியதாவது: ‘38 காஸ் டேங்கர் லாரிகளுக்கான வாடகை ஒப்பந்தம் வழங்குவதை பரிசீலனை செய்வதாக ஆயில் நிறுவனத்தினர் தெரிவித்தனர். அதன் காரணமாக வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x