யாழ்ப்பாணச் சிறையில் 38 தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம்

யாழ்ப்பாணச் சிறையில் 38 தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம்
Updated on
1 min read

தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, யாழ்ப்பாணச் சிறையில் தமிழக மீனவர்கள் 38 பேர் இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம், புதுக்கோட்டை, நாகைப்பட்டிணம் மற்றும் காரைக்காலைச் சார்ந்த 34 மீனவர்கள் கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு கடற்பரப்புகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

கடந்த நவம்பர் 21 அன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, டிசம்பர் 5-ஆம் தேதி வரையிலும் ஐந்தாவது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டு யாழ்பாணம் சிறையில் தமிழக மீனவர்கள் 38 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 85 விசைப்படகுகளுடன் தங்களை விடுவிக்க வலியுறுத்தி செவ்வாய்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதம் துவங்கிய 38 மீனவர்களும் இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரி மூர்த்தி சிறையில் உள்ள மீனவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் கடந்த அக்டோபர் 27, 28 ஆகிய இரண்டு தினங்களில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகம் அளித்த வாக்குறுதிகளை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டனர். ஆனால், இம்முறை மீனவர்கள் தங்களை விடுதலை செய்யும் வரை உண்ணாவிரதத்தை இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in