Published : 03 Dec 2014 10:11 AM
Last Updated : 03 Dec 2014 10:11 AM

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைய தலைவர், உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து வழக்கு: அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.ஜி.ரசூல் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத் தலைவராக இருந்த எஸ்.கபிலன் கடந்த 2012-ம் ஆண்டும், அதன் உறுப்பினராக இருந்த வேணுகோபால் 2013-ம் ஆண்டும் ஓய்வுபெற்றனர். குறிப்பிட்ட காலத்துக்குள் இப்பதவிகள் நிரப்பப்படாததால், உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டு, தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி எஸ். அக் ஷயகுமார் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இயக்குநராக (நிதி) இருந்த ஜி.ராஜகோபால் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் பதவிக்கு, இருவரின் பெயர்களை தேர்வுக் குழு பரிந்துரை செய்ய வேண்டும் ஆனால், அக் ஷயகுமாரின் பெயரை மட்டும் ஆணையத் தலைவர் பதவிக்கு தேர்வுக் குழு பரிந்துரை செய்தது. இந்த நியமனத்தில் விதிமுறை மீறப்பட்டது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர்கள், மின்சார வாரியத்தின் இரு அமைப்புகளில் பணியாற்றியபோது தொடர்ந்து பல ஆண்டுகள் நஷ்டம் ஏற்பட்டதாக தணிக்கைத்துறை அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு இவர்களை நியமித்திருக்கக்கூடாது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் பதவி தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன. உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது இந்த வழக்கு முடியும் வரை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று நீதிபதிகள் வாய்மொழியாக உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக ஆணையம் அதன் இணையதளத்தில் பொது அறிவிப்பு வெளியிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறது. மின்கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் இருந்து விண்ணப்பம் எதுவும் வராத நிலையில், ஆணையம் தன்னிச்சையாக மின்கட்டணத்தை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனமே சட்டப்படி கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், எந்த முடிவையும் அவர்கள் எடுக்கக்கூடாது. எனவே, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினரை நியமித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் அருணா ஜெகதீசன், புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் நேற்று இந்த மனுவை விசாரித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என்று வாய்மொழியாக உத்தரவிட்டனர். மனுதாரரின் மனுவுக்கு பதில் அளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x