Published : 16 Dec 2014 08:55 AM
Last Updated : 16 Dec 2014 08:55 AM
இலங்கையில் உள்ள தமிழர்களின் எந்த நலனுக்காக கச்சத் தீவை இந்திரா காந்தி தாரைவார்த்து கொடுத்தார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் நலனுக்காகவே கச்சத்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி அளித்தார் என்று தமிழக காங் கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சமீபத்தில் கூறியி ருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியாவின் சொத்தாக இருந்த கச்சத் தீவை, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி பல எதிர்ப்புகளை மீறி சர்வாதிகார முறையில் இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்தார். இதை இளங்கோவன் நியாயப்படுத்துவது அதிர்ச்சி அளிக்கிறது. கச்சத் தீவு தாரைவார்க்கப்பட்டது நியாயம் இல்லை என்று பாஜக மூத்த தலைவரான வாஜ்பாய் நாடாளுமன்றத்திலும், பாஜக தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி நீதிமன்றத்தின் வாயிலாகவும் போராடினர்.
கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்ததால் இரு நாடுகள் இடையே நட்புறவு காக்கப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால் அது இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக கொடுக்கப்பட்டது என்று யாரும் கூறவில்லை. இந்நிலையில் இளங்கோவன் புதிய காரணம் ஒன்றை கண்டு பிடித்துள்ளார்.
ஒருவேளை, தமிழர் நலனுக் காகவே கச்சத் தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது என்றால், அது எந்த நலனுக்காக வழங்கப்பட்டது. அந்த நலன் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததா, அந்த நலன் இலங்கை தமிழர்களுக்கு கிடைக்கவில்லை என்றால் கச்சத் தீவை மீட்பதற்கான ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டிருந்ததா என்பதை காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT