

சுனாமி தாக்குதல் போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படாமல் தடுக்க விஞ்ஞானப் பூர்வமான முறையில் தீர்வு காண வேண்டும் என, பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கூறினார்.
சுனாமி தாக்குதல் நடைபெற்று பத்து ஆண்டுகள் ஆனதன் நினை வாக, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு மையத்தின் சார்பில், ‘சுனாமிக்கு பிறகு’ என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது. சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன் வெளியிட, தமிழக முதன்மை வன அதிகாரி டாக்டர் பாலாஜி பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேசுகையில், “ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உள்ளது. சுனாமி போன்ற பேரழிவுகளை எதிர்கொள்ளும் அளவுக்கு நாம் நம்முடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, இத்தகைய பேரழிவுகள் ஏற்படாமல் தடுக்க விஞ்ஞானப்பூர்வமான முறையில் தீர்வு காண வேண்டும். அறிவியலையும், சமூகத்தையும் ஒன்றாக இணைத்து இதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், பிச்சாவரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தன மீனவர்கள் பங்கேற்று பேசினர்.