Published : 01 Dec 2014 06:43 PM
Last Updated : 01 Dec 2014 06:43 PM

செல்ஃபி மோகம்: பாம்பன் பாலத்தில் போக்குவரத்து நெரிசல்

செல்ஃபி மோகத்தினால் பாம்பன் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

ஸ்மார்ட் போன்கள் மூலம் தன்னைத்தானே எடுத்துக்கொண்டு பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அப்டேட் செய்யும் புகைப்படத்தைக் குறிக்கும் புதிய ஆங்கிலச் சொல் " செல்பி". இந்த " selfie" என்ற வார்த்தை தற்போதைய ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி 2014லும் இடத்தை பிடித்து விட்டது.

செல்போனின் செல்ஃபி எடுக்கிறேன் என்ற பெயரில் தற்செயலான விபத்து முதல் தற்கொலை வரை உயிர் பறிப்புகளுக்குக் காரணமாகவும், சமூக வலைதளங்களில் அதிகமாக செல்ஃபி பகிர்பவர்களுக்கு மனநோயாக மாறி வருவதுடன் நெருங்கிய உறவுகளிடம் பிரச்சினை உருவாகுவதாக பிரிட்டன் ஆய்வாளர்கள் சமீபத்தில் அறிவித்துள்ளனர்.

தற்போது செல்ஃபி பிரியர்களால் பாம்பன் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் பயணிகளும், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்தியாவுடன் ராமேசுவரம் தீவை இணைப்பது அன்னை இந்திரா காந்தி பாம்பன் பாலம் ஆகும். 2-1/2 கிலோ மீட்டத் தூரமுள்ள பாம்பன் பாலத்தில் இருந்து மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடல்கள், பாம்பன் ரயில் பாலம், பவளப்பாறைகள், குருசடை தீவு, மணலி தீவு, மணலிபுட்டி தீவு, கலங்கரை விளக்கம் ஆகியவற்றை கண்டு களிக்கலாம்.

பாம்பன் ரோடு பாலத்தின் இரு புறங்களிலும் ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் தங்களின் வாகனங்களை நிறுத்தி தங்களின் செல்போன் மற்றும் காமிராக்களில் செல்ஃபி மற்றும் குரூப்ஃபீ , புகைப்படங்களை எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால் பாம்பன் பாலத்தை கடக்கும் அரசு பேருந்துகள், கார்கள், வேன்கள் பாலத்தை கடக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. மேலும் போக்குவரத்து நெரிசலால் ஏற்பட்டு உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் பொதுமக்களும், பயணிகளும் தவிக்கின்றனர்.

இதுகுறித்து பாம்பன் காவல்துறை அதிகாரி கூறியதாவது, '' சபரிமலை ஐயப்ப சீசன் தொடங்கி உள்ளதால் ராமேசுவரம் வரும் ஐயப்ப பக்தர்கள் தங்களின் வாகனங்களை பாம்பன் பாலத்தில் நிறுத்தி புகைப்படங்கள் எடுப்பது மற்றும் வேடிக்கை பார்ப்பதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுபோல சுற்றுலாப் பயணிகள் பாம்பன் பாலத்தில் புகைப்படங்கள் எடுப்பதை தவிர்க்க முடியாது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை காவல்துறையினர் முறையாக ஒழுங்குப்படுத்துகிறோம், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x