Published : 04 Dec 2014 10:27 AM
Last Updated : 04 Dec 2014 10:27 AM

கல்விக் கடன் பிரச்சினைகளைத் தீர்க்க விழிப்புணர்வு இயக்கம் தொடக்கம்

மாணவர்களின் கல்விக் கடன் பிரச்சினைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதற்காக ‘கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

படிப்பை முடித்து ஓராண்டு வரை கல்விக் கடனுக்கான வட்டியோ, அசலோ திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயமில்லை. இந்தக் காலகட்டத்தில் கடனுக்கான வட்டியை மத்திய அரசே சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வழங்கிவிடும். வட்டி தள்ளுபடி காலம் முடிந்த பிறகு அந்தந்த வங்கிகளின் வட்டி விகிதப்படி வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு 72 அல்லது 120 தவணைகளில் வட்டியையும் அசலையும் மாணவர்கள் செலுத்த வேண்டும்.

இது தான் 2009-ம் ஆண்டு மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு. ஆனால், இதன்படி எந்த வங்கியும் செயல்படுவதில்லை என்கிறார் நாமக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார். தனது மகளுக்கு கல்விக் கடன் வழங்கிய நாளில் இருந்து 14 சதவீதம் வட்டி விதித்த ஒரு தனியார் வங்கியை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்திருக்கும் ராஜ்குமார், தன்னைப் போல பாதிக்கப்பட்ட நபர்களை ஒருங் கிணைத்து ‘கல்விக் கடன் விழிப் புணர்வு இயக்கம்’ என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய அவர் கூறியதாவது: கல்விக் கடன் விவகாரத்தில் மாணவர்க ளுக்காக தவணை விடுப்பு காலத்தில் மத்திய அரசிடம் இருந்து 5 சதவீதம் வட்டியைப் பெற்றுக்கொள்ளும் சில வங்கிகள், அதை மறைத்து சம்பந்தப் பட்ட மாணவர்களிடமும் 14 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றன. மத்திய அரசு வழங்கும் வட்டி மானியத்தை மற்ற வங்கிகளுக்கு வழங்கும் முன்னோடி வங்கியாக (Lead Bank) கனரா வங்கியை நியமித்திருக்கிறார்கள். இதில் என்ன வேதனை என்றால், பெரும்பாலான வங்கிகள் தங்களுக்கு வரவேண்டிய வட்டி மானியத்தை கனரா வங்கியிடம் இருந்து பெறுவதற்கு அக்கறை காட்டவில்லை.

இதனால் அந்த நிதியானது மத்திய அரசின் கஜானாவுக்கே திரும்பிவிட்டது. அரசு கொடுத்த மானியத்தை வாங்காத வங்கிகள் இப்போது அதையும் மாணவர்கள் தலையில் ஏற்றிவிட்டன. எஸ்.சி - எஸ்.டி மாணவர்களின் கல்விக் கடனுக்கான வட்டி மானியத்தை 2009-ல் இருந்து பெரும்பாலான வங்கிகள் பெற்றுக் கொள்ளாமல் இருக்கின்றன.

ஒன்று அந்த வங்கிகள் அந்தப் பிரிவு மாணவர்களுக்கு கடன் வழங்க மறுத்திருக்க வேண்டும் அல்லது கடனுக்கான வட்டியை அந்த மாணவர்களிடம் இருந்தே வசூலித்திருக்க வேண்டும்.

இந்தக் காரணங்களால்தான் அந்த வங்கிகள் வட்டி மானியத்தை பெறாமல் இருக்கின்றன. இதை அறிந்த இந்திய வங்கிகள் சங்கம், எஸ்.சி - எஸ்.டி மாணவர்களின் கல்விக் கடனுக்கான வட்டி மானிய தொகை கனரா வங்கியில் ஏராளமாக இருப்பில் உள்ளது.

சம்பந்தப்பட்ட வங்கிகள் அதை உடனடியாக பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றன என்று நவம்பர் 5-ம் தேதி, அனைத்து வங்கி களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. மொத்தத்தில் கல்விக் கடன் விவகாரத்தில் மத்திய அரசு விதித்த நிபந்தனைகளை வங்கிகள் கண்டுகொள்ளவில்லை.

இது குறித்து நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி, இந்திய வங்கிகள் சங்கம் ஆகி யோருக்கு நான் அனுப்பிய புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப் படாததால் அவர்களையும் வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்திருக் கிறேன். எனவே, கல்விக் கடன் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ‘கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம்.

கல்வி சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினை களுக்கும் உரிய தீர்வை இந்த இயக்கம் முன்னெடுத்துச் செய்யும் என்று ராஜ்குமார் தெரிவித்தார். (தொடர்புக்கு: 9442164601)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x