Published : 24 Dec 2014 09:53 AM
Last Updated : 24 Dec 2014 09:53 AM

சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்: சென்னை பெண் கைது

சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூரில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், சென்னை விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த அஸ்மா (45) என்ற பெண் சுற்றுலாப் பயணியாக, சிங்கப்பூருக்கு சென்றுவிட்டு திரும்பினார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது உள்ளாடை மற்றும் கைப்பையில் 100 கிராம் எடையுள்ள 42 தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணிடம் இருந்து இருந்து 4 கிலோ 200 கிராம் எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர்.

வறுமையால் கடத்தல்

விசாரணையில், குடும்ப வறுமையால் வெளிநாட்டில் சென்று வேலை செய்ய அஸ்மா திட்டமிட்டுள்ளார். அந்த நேரத்தில் இவரை அணுகிய 2 பேர், சிங்கப்பூரில் இருந்து நாங்கள் தரும் பொருளை உரியவரிடம் கொண்டு போய் கொடுத்தால் ரூ.10 ஆயிரம் தருகிறோம். சிங்கப்பூர் சென்று வருவதற்கான அனைத்து செலவையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதை நம்பி, அஸ்மா சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தி வந்துள்ளார் என்பது தெரியவந்தது. பெண்ணை தங்கக் கடத்தலில் ஈடு படுத்திய 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x