Published : 07 Dec 2014 09:48 AM
Last Updated : 07 Dec 2014 09:48 AM
திருப்பதிக்கு வரும் இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு மதிமுக சார்பில் கருப்புக்கொடி காட்டுவோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கை அதிபர் ராஜபக்ச, டிசம்பர் 10-ம் தேதி திருப்பதிக்கு வந்து வெங்கடாஜலபதி ஆலயத்தில் தரிசனம் செய்யவிருக்கிறார். இலங்கையில் தமிழர் பகுதியில் 1,750 இந்து கோயில்களை இடித்து, தமிழர் அடையாளங்களை முற்றிலுமாக அழித்தவர் ராஜபக்ச. பச்சிளம் குழந்தைகள் என்றும் பாராமல், தடை செய்யப்பட்ட குண்டுகளை எல்லாம் வீசி கோரப் படுகொலைகளை செய்தவர் அவர்.
இவர், மத்தியப் பிரதேசம் சாஞ்சிக்கு வந்தபோது, தமிழகத்தில் இருந்து 1,200 பேருடன் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானோம். ஏற்கெனவே, திருப்பதிக்கு ராஜபக்ச வந்தபோது, காவல்துறையின் தடைகளைத் தாண்டி மதிமுகவினர் கருப்புக்கொடி காட்டினர். அதேபோல இந்த முறையும் திருப்பதிக்கு வரவிருக்கும் ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அறிக்கையில் வைகோ தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT