

சென்னை: மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் அளித்த தகவல் அடிப்படையில், அவர்களின் வீடுகளுக்கே சென்று கடந்த சனிக்கிழமை 25 டன் பழைய சோஃபா, மெத்தைகள் அகற்றப்பட்டன.
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்கள் முன்கூட்டியே தரும் தகவலின் அடிப்படையில், அவர்களின் வீடுகளிலிருந்து பழைய சோஃபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் ஆகிய திடக்கழிவுகளை பெற்று அகற்றும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், நேற்று முன்தினம் (ஆக.29) மட்டும் 74 நபர்களிடமிருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், 25.2 டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்துக்கு எடுத்துச் சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அழிக்கப்பட்டது. இதற்காக 35 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று நடைபெறும் இந்த சேவையை பெறுவதற்கு, பொதுமக்கள் முன்கூட்டியே மாநகராட்சியின் “நம்ம சென்னை” செயலியில் பதிவு செய்ய வேண்டும் அல்லது மாநகராட்சியின் 1913 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்க வேண்டும். சென்னை மாநகராட்சியின் மூலம் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கும் தகவலை அனுப்பலாம்.
இதனடிப்படையில் மாநகராட்சிப் பணியாளர்கள் பதிவு செய்த நபர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் நேரடியாகச் சென்று, பழைய சோஃபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து பாதுகாப்பாகவும், அறிவியல் முறையிலும் அகற்றும் பணிகளை மேற்கொள்வார்கள். இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.