Published : 03 Dec 2014 09:05 AM
Last Updated : 03 Dec 2014 09:05 AM

தமிழகத்தில் 4.73 கோடி பேருக்கு ஆதார் அட்டை விநியோகம்: நிரந்தர மையங்களில் ஒரு மாதத்தில் 970 பேர் விண்ணப்பம்

தமிழகம் முழுவதும் 4.73 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் நிரந்தர மையங்களில் தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 970 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் ஆதார் அட்டை பெறாமல் விடுபட்டவர்களுக்காக 470 நிரந்தர மையங்கள் அமைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதுவரை 440 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக பட்சமாக சென்னையில் 53 நிரந்தர மையங்கள் அமைக் கப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் ஆதார் அட்டைக்காக விண்ணப் பிப்பவர்கள் மக்கள் தொகை பதிவேட்டில் பதிவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, நிரந்தர மையத்தில் உள்ள நோடல் அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். அவர் அதை உடனே சரிபார்த்து, கையெழுத்திடுவார். அதன் பிறகு, விண்ணப்பத்தில் உள்ள தகவல்கள் கணினியில் பதிவேற்றம் செயப்படும். பின்னர், பயோமெட்ரிக் முறையில் விண்ணப்பதாரரின் புகைப்படம் கைரேகை, கண் விழித் திரை ஆகிய தகவல்கள் சேகரிக்கப்படும். இறுதியாக கணினியில் பதிவேற்றம் செய்யும்போது தகவல்கள் சரியாக இருக்கின்றனவா என்று விண்ணப்பதாரர் நேரடியாக சரி பார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் ஆதார் அட்டைகளில் தவறுகள் ஏற்படுவதை தடுக்க முடியும்.

இது குறித்து மக்கள் தொகைக் கணக்கெடுப்பு செயல்பாட்டு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலக இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணா ராவ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

முன்பு, விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, அவை சென்னையில் உள்ள தலைமை யகத்தில் சரி பார்த்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பப்படும். எனவே, புகைப்படம் எடுக்க வேறு ஒரு நாள் செல்ல வேண்டியிருக்கும். ஆனால், தற்போது ஒவ்வொரு நிரந்தர மையங்களிலும் விண்ணப்பங் களை சரி பார்க்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற் கான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி, தமிழகத்தின் மக்கள் தொகை 7.11 கோடி. இதில், ஐந்து வயதுக்கு மேற்பட்ட 6.74 கோடி பேர் ஆதார் அட்டை பெற தகுதி பெற்றுள்ளனர். இதில், 4.73 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கிருஷ்ண ராவ் கூறினர்.

ஆதார் அட்டை கிடைத்த பிறகு, அதில் ஏதேனும் திருத்தம் இருந்தால் ஆன்லைன் மூலமாக மட்டுமே செய்ய முடியும். www.uidai.gov.inஎன்ற இணையதளத்தில் திருத்தங் களுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்திசெய்து, உரிய ஆவணங்களை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அல்லது, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை தபால் மூலம் UIDAI, Post Box No. 10, Chhindwara, Madhya Pradesh, 480001 என்ற முகவரிக்கோ அல்லது UIDAI Post Box No. 99, Banjara Hills, Hyderabad, 500034 என்ற முகவரிக்கோ அனுப்ப வேண்டும்.

தமிழகத்தில் ஏற்கெனவே சுமார் 20 லட்சம் பேருக்கு மக்கள் தொகை பதிவேட்டின்படி இல்லாமல், வங்கிகள், தபால் நிலையங்கள் மூலமாக ஆதார் அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டன. அவர்களுக்கு ஆதார் அட்டை கிடைத்திருந்தாலும்,மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்து கொண்டால்தான் அரசு திட்டங்களின் சலுகைகளை பெற முடியும். எனவே, நிரந்தர மையங்களில் புதிதாக விண்ணப் பிப்பவர்கள் போல், இவர்களும் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x