Published : 30 Apr 2014 08:05 AM
Last Updated : 30 Apr 2014 08:05 AM

ஆசிரியர் தேர்வு: ஐகோர்ட் புது உத்தரவு- வெயிட்டேஜ் மதிப்பெண் முறை செல்லாது என அறிவிப்பு

தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்வதற்காக வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் தற்போதைய முறை செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆசிரியர் பணி நியமனத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறை தொடர்பாக கடந்த 5.10.2012 மற்றும் 14.2.2014 ஆகிய தேதிகளில் அரசாணைகளை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்காக அதிகபட்சம் 60 வெயிட்டேஜ் மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு 15 மற்றும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்காக 25 என மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டது.

அதேபோல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்களுக்காக 60 வெயிட்டேஜ் மதிப்பெண்களும், 12-ம் வகுப்பு மதிப்பெண்களுக்காக அதிகபட்சம் 10, பட்டப் படிப்பு மதிப்பெண்களுக்காக அதிகபட்சம் 15 மற்றும் பி.எட். படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்காக அதிகபட்சம் 15 என மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வகை செய்யப்பட்டது.

இதன்படி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களில் 90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 60 வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கிடைக்கும். 80 முதல் 89 சதவீதம் பெற்றவர்களுக்கு 54 வெயிட்டேஜ் மதிப்பெண்களும், 70 முதல் 79 சதவீதம் வரை பெற்றவர்களுக்கு 48 மதிப்பெண்களும் 60 முதல் 69 சதவீதம் வரை பெற்றவர்களுக்கு 42 மற்றும் 55 முதல் 59 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு 36 வெயிட்டேஜ் மதிப்பெண்களும் கிடைக்கும்.

இதேபோல் 12-ம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்ப தனித்தனி வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கிடைக்கும். யார் அதிக வெயிட்டேஜ் மதிப்பெண் பெறுகிறார்கள் என்ற அடிப்படை யில் தேர்ச்சிப் பட்டியல் தயாரிக்கப்படும். இதேபோன்று பட்டதாரி ஆசிரியர் நியமனத் துக்கும் வெயிட்டேஜ் மதிப் பெண்கள் வழங்கப்பட்டு, தேர்ச்சிப் பட்டியல் தயாரிக்க வேண்டும்.

இவ்வாறு ஒரு குறிப்பிட்ட சதவீதத்திலிருந்து இன்னொரு குறிப்பிட்ட சதவீதம் வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஒரே விதமான வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறை சரியானது அல்ல என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இது தொடர்பான அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்று மனுக்களில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி எஸ்.நாகமுத்து, வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் தற்போதைய முறை பாகுபாடு நிறைந்தது என்றும், இந்த முறை செல்லாது என்றும் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:

பள்ளி, கல்லூரி படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பிலும் ஆசிரியர் தகுதித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்ப சரியான விகிதத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும்முறை தற்போது இல்லை. தகுந்த நிபுணர்களின் ஆலோசனையைப் பெறாமல் இந்த வெயிட்டேஜ் முறை உருவாக்கப்பட்டுள்ளது.

12-ம் வகுப்பு, பட்டப் படிப்பு, ஆசிரியர் பயற்சி படிப்பு மற்றும் தகுதித் தேர்வில் ஒவ்வொரு மாணவரும் பெற்ற மதிப்பெண் களுக்கு ஏற்ப சரியான விகிதத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும். அந்த முறை யானது அறிவியல் ரீதியாக சரியானதாக இருக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 5 சதவீத சலுகையை 2012-ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட வேறு சில மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x