Published : 23 Dec 2014 11:07 AM
Last Updated : 23 Dec 2014 11:07 AM

பாஜகவின் சுயரூபத்தை மக்கள் நன்கு அறிந்துள்ளனர்: இளங்கோவன்

தமிழக கலாச்சாரத்துக்கு எதிராக இந்தி, சமஸ்கிருத திணிப்பு வேலைகளில் ஈடுபட்டு தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைக்கிறது. அதன் சுயரூபத்தை தமிழக மக்கள் அறிவார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சென்னை மறைமலை நகர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமித் ஷா, காங்கிரஸ் கட்சி மீதும், ராகுல் காந்தி மீதும் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். குஜராத்தில் 2005-ம் நடந்த சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டரில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைக்குச் சென்ற அமித் ஷாதான் இப்போது பாஜக தேசிய தலைவர்.

நாட்டை 60 ஆண்டுகாலம் ஆட்சி செய்த காங்கிரஸ் என்ன நலனை தந்தது என்று அமித் ஷா கேட்கிறார். கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில்தான் தகவல் பெறும் உரிமை, கல்வி உரிமை, உணவு பெறும் உரிமை என பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டு பல சாதனைகள் செய்யப்பட்டன. ரூ.20 லட்சம் கோடி அந்நியச் செலாவணி கையிருப்போடுதான் ஆட்சியைவிட்டு காங்கிரஸ் இறங்கியது. ஆனால், கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியர் கணக்கிலும் ரூ.15 லட்சம் சேர்ப்போம், மீனவர்களுக்கு தனி அமைச்சரவை அமைப்போம் என்று பாஜகவினர் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆகின. காங்கிரஸ் ஊழல் கட்சி என்கிறார் அமித் ஷா. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் மீது எந்த குற்றச்சாட்டாவது வந்ததை அமித் ஷாவால் கூறமுடியுமா?

இந்தி, சமஸ்கிருத திணிப்பு உள்ளிட்ட வேலைகளில் பாஜக ஈடுபட்டு தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. பாஜகவின் சுயரூபத்தை தமிழக மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x