Published : 14 Dec 2014 10:14 AM
Last Updated : 14 Dec 2014 10:14 AM

மத்தியில் ஆட்சி மாறியும் உயர்கல்வியில் வளர்ச்சி ஏற்படவில்லை: துணைவேந்தர்கள் மாநாட்டில் ஜி.விஸ்வநாதன் குற்றச்சாட்டு

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் உயர் கல்வியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. லஞ்சம், நன்கொடை வசூலிப்புக்கு காரணம் அரசு நெருக்கடிதான் என்று வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் குற்றம்சாட்டினார்.

இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பு மற்றும் மீனாட்சி பல்கலைக்கழகம் சார்பில் தென்மண்டல பல்கலைக்கழக துணைவேந்தர்களின் 2 நாள் சென்னையில் நேற்று தொடங்கி யது. மாநாட்டை வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வ நாதன் தொடங்கிவைத்தார். அவர் பேசியதாவது:

உயர்கல்வியைப் பொறுத்த வரை, கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 2009-2014 காலகட்டம் ஓர் இருண்ட காலம். அந்த காலத்தில் உயர் கல்வித் துறையில் எவ்விதமான வளர்ச்சியும் ஏற்படவில்லை. பாஜக தலைமையில் அரசு அமைந்த நிலையிலும் உயர்கல்வியில் முன்பிருந்த அதே நெருக்கடிதான் நீடிக்கிறது. 10 சதவீத உயர்கல்வி மட்டுமே பல்கலைக்கழகங்களில் கிடைக்கிறது. எஞ்சிய 90 சதவீதத்தை கல்லூரிகள்தான் வழங்குகின்றன.

கல்லூரிகளுக்கு பல்கலைக் கழக இணைப்பு அங்கீகாரம் (அபிலியேஷன்) வழங்கும் நடைமுறை இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளில் மட்டுமே உள்ளது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இது நடை முறையில் இல்லை.

ஆராய்ச்சிப் பணிகளுக்கு இணைப்பு அங்கீகார முறை பெரும் தடையாக இருக்கிறது. உயர்கல்வியில் நிலவும் லஞ்ச, லாவண்யம், நன்கொடை அனைத் துக்கும் அரசு நெருக்கடிதான் காரணம்.

பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு எந்தவித மான கல்வித்தகுதியும் நிர்ணயிக் கப்படவில்லை. துணைவேந்தரின் நேர்முக உதவியாளர்களும் சிறைக்கு போய்வந்த வர்களும்கூட துணைவேந்தர்களாக முடிகிறது.

இவ்வாறு ஜி.விஸ்வநாதன் பேசினார்.

குஜராத் மாநில தொழிலாளர் நல ஆணையர் ஜெயந்தி எஸ்.ரவி சிறப்புரையாற்றினார். முன்னதாக, மீனாட்சி பல்கலைக்கழக வேந்தர் ஏ.என்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார். இணைவேந்தர் பேராசிரியர் ஏ.ஞானம் மாநாடு குறித்து அறிமுகவுரை ஆற்றினார்.

இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேராசிரியர் ஃபர்கான் காமர், மாநாட்டு மலரை வெளியிட்டார். நிறைவாக மீனாட்சி பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா பிரகாஷ் நன்றி கூறினார்.

இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பு மற்றும் மீனாட்சி பல்கலைக்கழகம் சார்பில் தென்மண்டல பல்கலைக்கழக துணைவேந்தர்களின் 2 நாள் மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. (இடமிருந்து) கீதா பிரகாஷ், ஏ.ஞானம், ஜி.விஸ்வநாதன், ஜெயந்தி எஸ்.ரவி, ஃபர்கான் காமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x