Published : 14 Dec 2014 09:33 AM
Last Updated : 14 Dec 2014 09:33 AM

சென்னையில் இன்று ‘தி இந்து’ வாசகர் திருவிழா: எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடக்கிறது

‘தி இந்து’ தமிழ் நாளிதழின் வாசகர் திருவிழா, சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இன்று காலை நடக்கிறது.

பாரம்பரியம் மிக்க ‘தி இந்து’ குழுமம் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் தொடங்கப்பட்டது. தமிழ் வாசகர்கள் மத்தியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வரும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஓராண்டை நிறைவு செய்துள்ளது.

இந்த ஓராண்டு நிறைவை வாசகர்களுடன் சேர்ந்து கொண்டாடும் விதமாக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வாசகர் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கோயம்புத்தூர், புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை, திருப்பூர், சேலம், வேலூர், ஈரோடு ஆகிய 12 நகரங்களில் நடந்த வாசகர் திருவிழாக்களில் நீதிபதிகள், பிரபல எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், திரைத்துறையினர், விவசாயிகள், வணிகர்கள், தொழில் துறையினர், பல்வேறு சமூக இயக்கங்களின் பிரதிநிதிகள் என ஏராளமான பிரபலங்கள் பங்கேற்று உரையாற்றினர்.

எல்லாவற்றுக்கும் மேலாக தங்கள் குடும்ப விழாக்களில் கலந்துகொள்வது போன்ற உற்சாகத்துடன் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பங்கேற்று, ‘தி இந்து’ நாளிதழின் நிறைகளையும், குறைகளையும் மிகவும் ஆழமாக மதிப்பீடு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக தலைநகர் சென்னையில் ‘தி இந்து’ வாசகர் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி வளாகத்தில் காலை 9.30 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

இந்த விழாவில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா மற்றும் திரைப்பட நடிகர் கார்த்தி ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

இவர்களுடன் வாசகர்கள் சிலரும் தங்களின் அன்றாட வாழ்வில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பற்றி தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். ​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x