ஜனவரி முதல் வாரத்தில் இலவச வேட்டி, சேலை

ஜனவரி முதல் வாரத்தில் இலவச வேட்டி, சேலை
Updated on
1 min read

தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இலவச வேட்டி-சேலைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட தமிழக அரசு ஆண்டுதோறும் இலவச வேட்டி- சேலைகளை விநியோகம் செய்து வருகிறது. தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் பச்சை நிற கார்டுகளுக்கும், முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கும் வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளன. மாநிலத்தில் அரிசி பெறும் ரேஷன் கார்டுகள் எண்ணிக்கை மட்டும் 1.86 கோடியாக உள்ளது.

ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்காக இந்த ஆண்டு ரூ.486 கோடி செலவில் இலவச வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பாக அனைத்து மாவட்ட தாலுகா அலுவலகங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து துணிநூல் மற்றும் கதர் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது,” தமிழகத்தில் இந்த ஆண்டு இலவச வேட்டி, சேலைகள் சுமார் 1.60 கோடி பேருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இலவச வேட்டி, சேலைகள் வரும் ஜனவரி முதல் வாரத்தில் வழங்கப்படும்’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in