Published : 13 Dec 2014 10:18 AM
Last Updated : 13 Dec 2014 10:18 AM

கல்விக் கடனை கட்டாத மாணவர்களின் பெயர்கள் ‘சிபிலில்’ பதிவு: வங்கிகளிடம் நஷ்டஈடு கேட்கிறது ‘கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கம்’

கல்விக் கடன் பிரச்சினைகளை எதிர் கொள்ள ராஜ்குமார் என்பவர் நாமக்கல் லில் ‘கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கம்’ தொடங்கியது ‘தி இந்து’வில் வெளியானது. அதைத் தொடர்ந்து பலர் ராஜ்குமாரை தொடர்பு கொண்டனர்.

இது தொடர்பாக ராஜ்குமார் கூறியதா வது: என்னிடம் பேசிய சிலர் வங்கிகளால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கமலம் என்பவர் பட்டா பிராமில் உள்ள இந்தியன் வங்கியில் வாங்கிய தனது மகளின் கல்விக் கடனில் ஒரு லட்ச ரூபாய் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கிறது. அதற்காக, அதே வங்கியில் பெற்ற வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்திய பிறகும் வங்கி அவரது வீட்டுப் பத்திரத்தைக் கொடுக்க மறுக்கிறது.

சிந்துஜா என்ற மதுரை மாணவி ஒரு லட்ச ரூபாய் கல்விக் கடன் செலுத்த வேண்டி இருக்கிறது. அதற்காக, அவரது தாயார் வங்கியில் அடகு வைத்த நகைகளுக்கான அசலையும் வட்டியையும் செலுத்திய பிறகும் நகைகளை கொடுக்க மறுக்கின்றனர். இப்படி மிக மோசமாக பாதிக்கப்பட்ட 25 பேரின் புகார்களை ரிசர்வ் வங்கி, நிதியமைச்சகம் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பி இருக்கிறோம்.

அனைவருக்குமே கல்விக் கடன் கொடுத்த நாளிலிருந்தே வட்டி போடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தெரியாமல் போனதால் வாராக் கடன் கணக்கில் ஏற்றி, அவர்கள் இனி எந்தக் கடனும் வாங்க முடியாத அளவுக்கு அவர்களது பெயர்களை ‘சிபிலில்’ பதிவு செய்துள்ளனர். மேலும், அந்த மாணவர்களிடம் கடனை வசூலிப்பதற் காக மக்கள் நீதிமன்றத்திலும் கொண்டு போய் நிறுத்தியுள்ளனர்.

தவறை தங்கள் பக்கம் வைத்துக் கொண்டு, கடனைத் திருப்பிச் செலுத்துவதில் நாணயம் இல்லாதவர்கள் என மாணவர்களை கேவலப்படுத்திய வங்கிகள், ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10 லட்சம் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்போம். என்றார்.

வங்கிகளின் வாடிக்கையாளர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் சென்னை ரிசர்வ் வங்கி அலுவலக தனிப் பிரிவு பொதுமேலாளர் சந்திர சூடனை இதுகுறித்து தொடர்பு கொண்டபோது, அவர் தரப்பில் பேசியவர்கள் கூறியதாவது: வெறும் அறிவிப்புகள் செல்லுபடியாகாது. முறையான உத்தரவு வந்தால்தான் வங்கிகள் கடைபிடிக்கும். வட்டியின்றி எந்த வங்கியும் கல்விக் கடன் தராது. கடன் பெறப்பட்ட நாளிலிருந்து வட்டி கணக்கிடப்படும். படிக்கும் காலத்தில் வட்டி மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது. அம்மானியத்தை பெற தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

வங்கிகளுக்கு மானியம் வந்து சேரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாணவர்தான் பொறுப்பு. குறிப்பிட்ட காலத்துக்குள் அதை கட்டத் தவறினால் மாணவரின் பெயர் ‘சிபிலில்’ பதிவு ஆகும். படிக்கின்ற காலத்திலேயே மாணவர்கள் பெயர்களை ‘சிபிலில்’ சேர்த்திருப்பதாகவோ அவர்களை மக்கள் நீதிமன்றத்தில் நிறுத்தியதாகவோ சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்து புகார்கள் வந்தால் ரிசர்வ் வங்கி உரிய நடவடிக்கை எடுக்கும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x