Published : 28 Dec 2014 11:08 AM
Last Updated : 28 Dec 2014 11:08 AM

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக தமிழக அரசு முடிவு

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடையை விலக்கக் கோரி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு விடுமுறை முடிந்ததும், வரும் 5-ம் தேதி மனு தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் ஆலோசனை நடந்துவருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, வீரத்தை பறைசாற்றும் விதமாக இந்தப் போட்டி நடத்தப்படுவதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தை முதல் நாளான பொங்க லன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கல் நாளில் பாலமேட்டிலும், காணும் பொங்கலன்று அலங்கா நல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும். இதேபோல் சிவகங்கை மாவட்டம் சிராவயல், திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப் பட்டி உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும்.

இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்தப் போட்டிகளை காண வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் மதுரைக்கு வருவது வழக்கம். இந்நிலையில், பயிற்சி மற்றும் போட்டி என்ற பெயரில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி, ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய பிராணிகள் நல வாரியம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை விதித்து கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

இதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் வலுத்துள்ளன. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது பொங்கலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், போட்டியை நடத்தும் கிராமக் குழுவினர், அதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளனர். போட்டி தொடக்கத்துக்கான கொடிகளையும் ஏற்றிவிட்டனர். போட்டிகளை நடத்த மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் இன்னும் அனுமதி அளிக்கப்பட வில்லை. அதேநேரம், போட்டிகளை நடத்த தமிழக அரசு உரிய முயற்சி எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதுகுறித்து தமிழக அரசு உயரதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு நிலுவையில் உள்ளது. மேலும் க்யூரேட்டிவ் என்ற தடை நீக்கக் கோரும் மனுவையும் தாக்கல் செய்ய அரசு ஆலோசித்து வருகிறது.

தற்போது உச்ச நீதிமன்றத்துக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜனவரி 5-ம் தேதி, உச்ச நீதிமன்றத்தை சட்டரீதியாக நாட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு முன் அனுமதி பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்காவிட்டால் தமிழக அரசின் சார்பில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளிக்கும் அவசரச் சட்டம் கொண்டு வரலாமா என்பது குறித்தும் சட்ட வல்லுநர்களுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தத் தொடங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x