Published : 03 Apr 2014 12:52 PM
Last Updated : 03 Apr 2014 12:52 PM

வேட்புமனு தாக்கலின்போது விதிமீறலா?- தேர்தல் அலுவலகத்தில் கண்காணிப்பு; அதிகாரி அறையில் நேரலையாகப் பதிவு

அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது, தேர்தல் அலுவலக வளாகத்தில் விதி மீறலில் ஈடுபடுகிறார்களா என்பதைக் கண்டறிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்தக் காட்சிகள் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நேரடியாக பதிவு செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மனு தாக்கலுக்கு வரும் 5-ம் தேதி கடைசி நாளாகும். மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், தேர்தல் அலுவலரின் அலுவல கத்தில் இருந்து 100 மீட்டருக்குள் எந்தப் பேரணியும் நடத்தக்கூடாது, கட்சிக் கொடிகளுடன் தேர்தல் அலுவலகம் அருகிலோ, அலுவலக வளாகத்துக்குள்ளோ வரக்கூடாது என்று விதிமுறைகள் உள்ளன.

ஆனால், பல இடங்களில் வேட்பாளர்களுடன் வருவோர் விதிகளை மீறும் வகையில் நடந்து கொள்வதாக புகார்கள் எழுகின்றன. இதையடுத்து தேர்தல் அலுவலக வளாகத்தின் வாயில் முதல், அலுவலகத்தின் உள்பகுதி வரை தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தக் கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை, தேர்தல் அலுவலர் தனது அறையிலுள்ள எல்.சி.டி. மானிட்டரில் நேரடியாக பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மனு தாக்கலுக்கு வரும் வேட்பாளர், திரும்பிச் செல்வது வரை அவரது நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன.

இதுகுறித்து உதவித் தேர்தல் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘நாடாளுமன்றத் தொகுதி வாரியாகவும் சட்டமன்றத் தொகுதி வாரியாகவும் வீடியோ படைகள் உள்ளன. அவர்கள் பதிவு செய்யும் வீடியோக்களும், தேர்தல் அலுவலக வளாகத்திலுள்ள வீடியோ பதிவுகளும் வீடியோ ஆய்வுக் குழுக்களால் தினமும் ஆய்வு செய்யப்பட்டு அதன் நகலுடன் அறிக்கை தயார் செய்யப்படுகிறது. இந்த ஆய்வில் விதி மீறல்கள் கண்டறியப்பட்டால், வீடியோ பதிவுடன் கூடிய காட்சிகள் மற்றும் போலீஸாரின் சாட்சியத்துடன் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x