Published : 30 Nov 2014 02:24 PM
Last Updated : 30 Nov 2014 02:24 PM

வைகோவுக்கு மிரட்டல்: ராஜாவுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எச்.ராஜா மிரட்டல் விடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கையில், "பிரதமர் மோடியையோ, மத்திய அரசையோ அல்லது ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்களைப் பற்றியோ வைகோ தொடர்ந்து பேசினால் அவர் செல்லும் இடங்களில் பேசிவிட்டு பாதுகாப்பாக திரும்ப முடியாது என்றும், அவர் நாவை அடக்காவிட்டால் அவரை அடக்குவது எப்படி என்று ஒவ்வொரு பாஜக தொண்டனுக்கும் தெரியும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எச்.ராஜா தஞ்சையில் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

வைகோ எழுப்பும் பிரச்சனைகளுக்கு அரசியல் ரீதியாக பதிலளிப்பதை விட்டுவிட்டு இவ்வாறு மிரட்டல் விடுப்பது அவரது இயலாமையை மட்டுமின்றி, அரசியல் நாகரீகமற்ற தன்மையையும் வெளிப்படுத்துகிறது.

அரசியலில் விமர்சனம் என்பதும், கேள்வி கேட்பது என்பதும் ஜனநாயகத்தின் பிரிக்க முடியாத அம்சங்களாகும். இதை சகித்துக் கொள்ளாமல் மிரட்டல் விடுப்பது என்பது எதேச்சதிகாரப் போக்கின் வெளிப்பாடு ஆகும்.

மத்தியில் ஆளும் பாஜகவின் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவராக விளங்கும் எச்.ராஜாவின் இத்தகைய மிரட்டல் விடுக்கும் எதேச்சதிகார பேச்சிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பாக வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்துவதோடு, தமிழகத்திலுள்ள மதச்சார்பற்ற, ஜனநாயகத்தில் ஆர்வமுள்ள அனைவரும் இத்தகைய மிரட்டலை ஏற்றுக் கொள்ளவோ, சகித்துக் கொள்ளவோமாட்டார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x