Published : 10 Nov 2014 08:23 PM
Last Updated : 10 Nov 2014 08:23 PM

பிரதமர் மோடி இலங்கை அதிபருடன் மீனவர்கள் விடுதலை பற்றி பேசினாரா? ராமேசுவரம் மீனவர்கள் சந்தேகம்

இலங்கை நீதிமன்றத்தினால் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியறுத்தி பிரதமர் மோடி இலங்கை அதிபருடன் பேசினாரா? என ராமேசுவரம் மீனவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் 28, 2011 அன்று தங்கச்சிமடத்தை சார்ந்த எமர்சன், பிரசாத், லாங்லெட், வில்சன் மற்றும் அகஸ்டஸ் ஆகிய தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கிளாடுவின் என்பவருக்கு சொந்தமான மீன் பிடி விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்றனர். மீனவர்கள் கச்சத்தீவுக்கு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு அடைக்கப்பட்டனர். பின்னர் மீனவர்கள் மீது போதைப் பொருள் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இலங்கை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தநிலையில் கடந்த அக்டோபர் 30 அன்று, போதை மருந்து கடத்திய குற்றத்திற்காக தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

மீனவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்றும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு தங்கச்சிமடத்தில் கடந்த பத்து தினங்களுக்கும் மேலாக போராடங்கள் நடைபெற்று வருகிறது.

திங்கட்கிழமை தங்கச்சிமடம் தேவாலயத்தில் இருந்து துவங்கி வலசை தெருவரையிலும் மீனவ பெண்கள் கவன ஈர்ப்பு பேரணி நடத்தினர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் மீனவர்கள் பெண்கள் தங்களின் குடும்பத்தோடு பெருந்திரளாக கலந்து கொண்டனர். இதில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரரிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கலந்து கொண்டார்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் மீனவப் பிரதிநிதி சேசு கூறியதாவது,

பிரதமர் நரேந்திரமோடியும், இலங்கை அதிபர் ராஜபக்சேவும், தூக்கு தண்டனை பெற்றுள்ள 5 தமிழக மீனவர்கள் குறித்து தொலைபேசி மூலம் பேசினர். அப்போது, ஐந்து மீனவர்களையும் இந்திய சிறைக்கு மாற்றக் கோரும் மனுக்களை பரிசீலிப்பதாகவும். அவர்களை இந்திய சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் ராஜபக்சே மோடியிடம் உறுதி அளித்துள்ளார் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

ஆனால் இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி அவர்கள் பேசியது தொடர்பாக ஏன் பிரதமர் அலுவலகமோ அல்லது வெளிவிவகாரத்துறை அமைச்சகமோ அதிகாரபூர்வமாக செய்தி வெளியிடவில்லை. தமிழக மீனவர்களுக்கும் எதிரான மனப்பான்மை கொண்ட சுப்ரமணிய சுவாமி தமிழகத்தில் ஐந்து மீனவர்களை மீட்க தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடைபெறும் போராட்டத்தை சீர்குலைப்பதற்காக இந்த தகவலை வெளியிட்டாரா என்று மீனவர்கள் சந்தேகப் படுகின்றோம்.

எனவே பிரதமர் மோடி இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் தொலைப்பேசியில் ஐந்து அப்பாவி மீனவர்கள் தொடர்பாக பேசினாரா என்பது குறித்தும் அப்பேச்சு வார்த்தையின் விவரங்களையும் உடனடியாக வெளியிட வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x