Published : 16 Nov 2014 06:21 PM
Last Updated : 16 Nov 2014 06:21 PM

ஐவர் அப்பீல் மனுவை வாபஸ் பெற இலங்கை அமைச்சர் மிரட்டல்: மீனவர்கள் குற்றச்சாட்டு

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற வேண்டும் என அந்நாட்டு அமைச்சர் செந்தில் தொண்டமான், பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினரை தொலைபேசியில் மிரட்டியதாக தங்கச்சிமடம் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து தங்கச்சிமடம் மீனவப் பிரநிதி நல்லதம்பி சேவியர் கூறும்போது, "இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் நேரடியாக தொலைபேசியில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொண்டு, வழக்கின் மேல்முறையிட்டு மனுவை வாபஸ் வாங்கவேண்டும் என மிரட்டியதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேலும், இந்திய நாட்டு பிரஜைகளை அந்நிய நாட்டு அமைச்சர் ஒருவர் அச்சுறுத்துவது சர்வதேச குற்றம். இததொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உடனடியகா நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

முன்னதாக சனிக்கிழமை தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் உண்மை நிலையை அறிவிக்கக்கோரி பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராமேசுவரத்தை சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத் மற்றும் லாங்லெட் ஆகிய 5 மீனவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி, விசைப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவி அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் 5 மீனவர்களையும் சிறைப்பிடித்தனர். பின்னர், போதைப்பொருள் கடத்தியதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மீனவர்கள் சார்பில் வழக்காடுவதற்காக தமிழக அரசின் சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

கடந்த அக்டோபர் 30 அன்று தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் கண்டித்து மீனவர் இயக்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.

5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனையை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான 20 லட்சம் ரூபாயை தமிழக அரசின் சார்பில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கில் மீனவர்கள் சார்பில் ஆஜராவதற்காக இலங்கை அதிபரின் உயர்மட்ட சட்ட ஆலோசகர்களின் ஒருவராக எஸ்.அனில் சில்வாவை நியமனம் செய்யப்பட்டு அவர் கடந்த செவ்வாய்கிழமை இலங்கை உச்சநீதிமன்றத்தில் 5 மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 10 அன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், ஊவா மாகாண உள்கட்டமைப்புத் துறை அமைச்சருமான செந்தில் தொண்டமான், தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை சிறையிலிருந்து இந்தியச் சிறைக்கு அதிபர் ராஜபக்சே மாற்றுவதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக அறிவித்தார்.

மேலும் நவம்பர் 14 அன்று, தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே முடிவு செய்துள்ளார் எனவும் எனவே, அந்த மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெறுமாறு இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்திய தூதரக அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது. இந்திய அரசு மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற்றவுடன், 5 மீனவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள். அதிகபட்சமாக திங்கள்கிழமைக்குள் அவர்கள் விடுதலையாக வாய்ப்பு உள்ளது என்றும் அமைச்சர் தொண்டமான் தமிழக ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இலங்கை உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற வேண்டும் என இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான், பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினரை தொலைப்பேசியில் மிரட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x