Published : 04 Nov 2014 08:32 AM
Last Updated : 04 Nov 2014 08:32 AM

இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர் குடும்பத்தினர் முதல்வருடன் சந்திப்பு

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களின் குடும்பத்தினர், சென்னைக்கு வந்து முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து மனு அளித்தனர்.

மீனவர்களை விடுவிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்று அவர்களிடம் முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

மீனவர்களின் குடும்பத்தினர், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா தலைமையில், முதல்வர் பன்னீர்செல்வத்தை நேற்று பிற்பகலில் சந்தித்துப் பேசினர். அப்போது, அனைத்து மீனவர்களின் கூட்டமைப்பு, பாம்பன், ராமேசுவரம், மண்டபம் மற்றும் தங்கச்சி மடம் சார்பில் முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த அக்டோபர் 30-ம் தேதியன்று இலங்கை உயர் நீதிமன்றத்தால், தூக்குத் தண்டனை விதிக்கப்பெற்ற 5 மீனவர்களான எமர்சன், பிரசாத், லாங்லெட், வில்சன் மற்றும் அகஸ்டஸ் ஆகியோர், கடந்த நவம்பர் 28, 2011-ல் கிளாடுவின் என்பவருக்கு சொந்தமான மீன் பிடி விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் கச்சத்தீவுக்கு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, எல்லை தாண்டி வந்தவர்கள் என்ற வகையில், குற்றஞ்சாட்டி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். பின் இவர்கள் மீது போதைப் பொருள் கடத்தியதாக, பொய்யான வழக்கு புனைந்து மேற்படி வழக்கு 3 ஆண்டுகளாக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

தமிழக அரசு உளவுத்துறை மூலம், பல்வேறு நிலைகளில் உண்மை நிலையை விசாரித்து, அதன் பேரில் 5 மீனவர்களும் குற்றமற்றவர்கள் என்று அரசுக்கு அறிக்கை கொடுத்து, அந்த அறிக்கை இலங்கை அரசுக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு மாதம் ரூ.7,500 வீதம் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வழங்க அரசாணை பிறப்பித்ததுடன், குடும்பப் பிள்ளைகளுக்கு குடும்பம் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் ஆணை பிறப்பித்தது. அதேநேரம் இந்த வழக்கை, இலங்கை வழக்கறிஞர்கள் மூலம் நடத்த, பொருளாதார உதவிகள் செய்துள்ளீர்கள். தற்போது 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மீனவர்களின் தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்யச் செய்து, அவர்களை விரைவில் மீட்டுத்தரும் என உறுதியாக நம்புகிறோம்.

மத்திய அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ளவும், இதன் மூலம் 5 மீனவர்களும் விடுதலையாகி, தாய்த் திருநாட்டில், எங்களின் சொந்தங்களாய், எங்களோடு வாழ வழிவகை செய்யவும் மன்றாடி கேட்டுக் கொள்கிறோம். இத்துடன் இன்று வரை, இலங்கை வசம் சிறை பிடிக்கப்பட்டுள்ள 79 விசைப் படகுகளையும், இலங்கை வன்கொடுமை சிறையில் வாடும் 24 மீனவர்களையும், உடனடியாக மீட்டுத் தர மத்திய அரசை கேட்டு மீட்டுத் தாருங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது, 5 மீனவர்களின் சார்பில் அவர்களின் குடும்பத்தினர் வில்சன் மனைவி ஜான்சி, அகஸ்டஸ் மனைவி பாக்யலட்சுமி, பிரசாத் மனைவி ஜெனிதா, லாங்லெட் தாயார் இன்போண்டா மற்றும் எமர்சன் மனைவி லாவண்யா மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் முதல்வரைச் சந்திக்க வந்திருந்தனர்.

கொழும்பு நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்தனர். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x