Published : 14 Jul 2019 01:44 PM
Last Updated : 14 Jul 2019 01:44 PM

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்து ஆராய திமுக சார்பில் ஆய்வுக் குழு: ஸ்டாலின் அறிவிப்பு

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்து ஆராய்ந்திட திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வுக்குழுவை அமைத்துள்ளார். இதில் தங்கம் தென்னரசு, பொன்முடி, பிரின்ஸ் கஜேந்திர பாபு, டாக்டர் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ''தமிழ்நாட்டில் மும்மொழித்திட்டத்தை அறிவித்து - அதன் மூலம் இந்தியைத் திணிக்கும் மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து- அந்த வரைவுக் கொள்கையில் உள்ள இந்தித் திணிப்பு தொடர்பான வாசகங்களை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனாலும் ஏதாவது ஒரு வடிவில் இந்தித் திணிப்பில் தீவிரமாக இருக்கும் மத்திய பாஜக அரசு, 2019-20 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதி நிலை அறிக்கையில் கூட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களை நியமிப்பதற்கு நிதி ஒதுக்கியிருப்பது முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது.

இந்நிலையில் அன்னைத் தமிழ் மொழியாம் செம்மொழிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கை பற்றி கல்வித்துறை வல்லுநர்களின் கருத்தினை அறிய திமுக விரும்புகிறது. எனவே, இக்கொள்கை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளித்திட திமுக சார்பில் ஆய்வுக் குழு அமைக்கப்படுகிறது.

ஆய்வுக் குழு உறுப்பினர்கள்

1. முனைவர் க.பொன்முடி, முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர்.

2.  தங்கம் தென்னரசு, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.

3. முனைவர் அ. ராமசாமி, முன்னாள் துணைத் தலைவர், தமிழக அரசு உயர்கல்வி மன்றம்.

4. முனைவர் ம.இராஜேந்திரன், முன்னாள் துணை வேந்தர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்.

5. முனைவர் கிருஷ்ணசாமி, முன்னாள் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி.

5. சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ., திமுக மாணவர் அணிச் செயலாளர்.

6. டாக்டர் ரவீந்திரநாத், சமூக நீதிக்கான மருத்துவர் சங்கம்.

7. பேராசிரியர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுக் கல்விக்கான மாநில மேடை.

8. டாக்டர் எஸ்.செந்தில்குமார், எம்.பி.,

வரைவு புதிய தேசிய கல்விக் கொள்கையை ஆராயும் இந்த ஆய்வுக் குழு பத்து நாட்களுக்குள், தனது அறிக்கையினை தலைமைக் கழகத்திடம் அளிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் திமுகவின் கருத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் வழங்கப்படும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x